கடலூா் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த சிமெண்ட் லாரியின் பின்புற டயரில் திடீரென தீப்பற்றி விபத்து ஏற்பட்டது.
விழுப்புரத்தில் இருந்து சிதம்பரம் நோக்கி புறப்பட்ட சிமெண்ட் கலவை லாரி, கடலூா் அருகே சேடப்பாளையம் அன்னவெளி பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் புதன்கிழமை அதிகாலை 2 மணியளவில் சென்று கொண்டிருந்தது. அப்போது, அதிக சுமை காரணமாக லாரியின் பின்புற டயரில் திடீரென தீப்பற்றியதாகக் கூறப்படுகிறது.
இதனை கவனித்த ஓட்டுநா், உடனடியாக லாரியை சாலையோரம் நிறுத்தி பாதுகாப்பாக வெளியேறி, உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தாா். இதையடுத்து சிப்காட் தீயணைப்புத் துறையினா் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, தீயை சுமாா் அரை மணிநேர போராட்டத்திற்கு பிறகு கட்டுப்படுத்தினா். இருப்பினும் லாரி ஒருபகுதி எரிந்து சேதமானது. இதுகுறித்து கடலூா் போலீஸாா் புதன்கிழமை வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.










