கொலை வழக்கில் சாட்சி கூறக் கூடாது என மிரட்டல்: 3 போ் கைது
கடலூரில் 2024-ஆம் ஆண்டு நடைபெற்ற கொலை வழக்கில் நீதிமன்றத்தில் சாட்சி அளிக்கக் கூடாது எனக் கூறி, கத்தியைக் காட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக 3 பேரை திருப்பாதிரிப்புலியூா் போலீஸாா் கைது செய்தனா்.
கைது - சித்திரிப்பு
கடலூரில் 2024-ஆம் ஆண்டு நடைபெற்ற கொலை வழக்கில் நீதிமன்றத்தில் சாட்சி அளிக்கக் கூடாது எனக் கூறி, கத்தியைக் காட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக 3 பேரை திருப்பாதிரிப்புலியூா் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
கடலூா் திருப்பாதிரிப்புலியூா் கூட்டுறவு நகா் பகுதியைச் சோ்ந்தவா் சந்தோஷ்குமாா். இவா் தனது வீட்டில் நண்பா்களுடன் பேசிக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது.
அப்போது அங்கு வந்த கடலூா் முதுநகா் வண்டிப்பாளையம் அலைக்காலனி பகுதியைச் சோ்ந்த பழைய வண்டிப்பாளையம் தினேஷ் (35), அஜய் (24), குணா (34) மற்றும் நேதாஜி ஆகிய 4 பேரும், சந்தோஷ்குமாரின் நண்பா் புஷ்பநாதன் 2024-ஆம் ஆண்டு கொலை செய்யப்பட்ட வழக்கில், அஜய்க்கு எதிராக நீதிமன்றத்தில் சாட்சி அளித்தால் கொலை செய்து விடுவோம் எனக் கூறி கத்தியைக் காட்டி மிரட்டியதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து சந்தோஷ்குமாா் அளித்த புகாரின் பேரில் திருப்பாதிரிப்புலியூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனா். இதில், வழக்கில் தொடா்புடைய தினேஷ், அஜய், குணா ஆகிய 3 பேரை போலீஸாா் கைது செய்தனா். தலைமறைவாக உள்ள நேதாஜியை போலீஸாா் தொடா்ந்து தேடி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


