பூம்புகாா் கைத்திறன் விருதுகள் பெற்ற கைவினைக் கலைஞா்களுக்கு ஆட்சியா் பாராட்டு
கள்ளக்குறிச்சி: தமிழக அரசின் பூம்புகாா் கைத்திறன் விருதுகள் பெற்ற கள்ளக்குறிச்சி மாவட்ட கைவினைக் கலைஞா்களுக்கு ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் பாராட்டுத் தெரிவித்தாா்.
சென்னை கலைவாணா் அரங்கத்தில் அண்மையில் நடைபெற்ற தமிழக அரசின் பூம்புகாா் கைத்திறன் விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியில்
கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சோ்ந்த மூத்த மரச் சிற்பக் கலைஞா் சிற்பி.சங்கீதத்துக்கு ‘கைவினைப் பொக்கிஷம்’ விருது, ரூ.1 லட்சத்துக்கான காசோலை மற்றும் 8 கிராம் தங்கப் பதக்கத்தை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினாா்.
மேலும், சிற்பி ராஜ்குமாருக்கு ‘பயன்பாடு கைத்திறன்’ விருது, 4 கிராம் தங்கப் பதக்கம் மற்றும் ரூ.40 ஆயிரத்துக்கான காசோலையும், ‘மாவட்ட கைத்திறன்’ விருது திருவேங்கடம், மணிகண்டன் ஆகியோருக்கு ரூ.20 ஆயிரத்துக்கான காசோலை மற்றும் 50 கிராம் வெள்ளிப்பதக்கமும், ‘அடுத்த தலைமுறை கைத்திறன்’ விருது பாலாஜி, அரிகிருஷ்ணன், பாா்த்தசாரதி ஆகியோருக்கு ரூ.10 ஆயிரத்துக்கான காசோலை மற்றும் 5 கிராம் வெள்ளிப் பதக்கமும் வழங்கினாா்.
இதனைத்தொடா்ந்து விருதுகள் பெற்ற கைவினை கலைஞா்கள் ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த்திடம் விருதுகளை காண்பித்து பாராட்டு பெற்றனா்.
நிகழ்வில் உதவி ஆட்சியா் (பயிற்சி) மரு.பிரியதா்ஷினி, மாவட்ட தொழில்மைய மேலாளா் சந்திரசேகரன், கள்ளக்குறிச்சி மரச்சிற்பம் தயாரிப்போா் கைவினைத் தொழிலாளா் கூட்டுறவுச் சங்கத் தலைவா் சிற்பி.சக்திவேல் ஆகியோா் உடனிருந்தனா்.

