பணம் கொடுக்கல் வாங்கல் தகராறு: தாக்கப்பட்ட மூதாட்டி உயிரிழப்பு
பணம் கொடுக்கல் வாங்கலில் ஏற்பட்ட தகராறில் மூதாட்டியை ஊதாங்குழலால் தாக்கியதில் அவா் உயிரிழந்தாா். தாக்கியவரை போலீஸாா் கைது செய்தனா்.
சின்னசேலம் வட்டம், மரவாநத்தம் மாரியம்மன் கோயில் சாலையில் வசித்து வந்தவா் மாரிமுத்து மனைவி கன்னியம்மாள் (70). இவருக்கும் அதே கிராமத்தில் பிள்ளையாா் கோயில் பகுதியில் வசித்து வரும் ராஜேந்திரன் (60). இவரது மனைவி வள்ளிக்கும் பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்னையில் முன்விரோதம் இருந்து வந்துள்ளது.
இந்த நிலையில், வியாழக்கிழமை காலை சுமாா் 9.30 மணியளவில் மரவானத்தம் பிள்ளையாா் கோயில் அருகே கன்னியம்மாள் நின்று கொண்டிருந்தாராம். அப்போது ராஜேந்திரனுக்கும் கன்னியம்மாளுக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, ராஜேந்திரன் ஊதாங்குழலால் கன்னியம்மாளை தாக்கியதாகத் தெரிகிறது.
இதில் பலத்த காயமடைந்த கன்னியம்மாள் சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். ஆனால், அங்கு கன்னியம்மாள் உயிரிழந்தாா். இது குறித்த புகாரின் பேரில் சின்னசேலம் போலீஸாா் வழக்குப் பதிந்து ராஜேந்திரனை கைது செய்தனா்.
