போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்களுக்குத் தேர்தல் எப்போது?

திருநள்ளாறு திருவிழாவைக் காரணம்காட்டி, கடந்த 10

Updated On :13 அக்டோபர் 2012, 10:52 pm

திருநள்ளாறு திருவிழாவைக் காரணம்காட்டி, கடந்த 10 மாதங்களுக்கு முன்பு ஒத்திவைக்கப்பட்ட, புதுச்சேரி மாநில பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தல் தற்போதுவரை நடைபெறவில்லை.

இத்தேர்தல் மீண்டும் எப்போது தொடங்கும் என பால் உற்பத்தியாளர்கள் கேள்வி எழுப்பும் நிலையில், திடீரென அரசு மூவர் குழுவை நியமித்துவருகிறது.

புதுச்சேரி மாநிலத்தில் 123 பால் கூட்டுறவு சங்கங்கள் உள்ளன. இவற்றின் மூலமே புதுச்சேரி மாநிலத்துக்கான பால் கொள்முதல் நடைபெற்று, பாண்லேவுக்குப் பால் கிடைக்கிறது.

இந்த கூட்டுறவு சங்கங்களுக்கு ஒவ்வொரு 3 ஆண்டுகளுக்கு ஒரு முறையும் தேர்தல் நடத்தப்பட்டு, சங்க உறுப்பினர்களில் இருந்து 9 பேர் இயக்குநர்களாகத் தேர்வு செய்யப்படுவர். அவர்களில் 5 பேரின் ஆதரவு கொண்ட ஒருவர் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படுவார்.

இந்நிலையில், கடந்த 2011-ம் ஆண்டோடு பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்களுக்கான பதவிக்காலம் முடிந்ததையொட்டி, இவற்றுக்கு 2011 டிசம்பர் 20-ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என அறிவிப்பு வெளியானது. இதைத் தொடர்ந்து, டிசம்பர் 13-ம் தேதி வரை வேட்புமனுக்கள் பெறப்பட்டு, பரிசீலனை நடைபெற்றது. அன்றைய தினம் கூட்டுறவு சங்கங்களில் திடீரென சுற்றறிக்கை ஒட்டப்பட்டது.

அதில், திருநள்ளாறு கோயில் திருவிழா நடைபெறுவதையொட்டி, பாதுகாப்புப் பணிக்காக போலீஸôர் அனைவரும் அங்கே சென்றிருப்பதால், தேர்தல் பாதுகாப்புப் பணியில் போலீஸôரை ஈடுபடுத்த முடியவில்லை. எனவே, தேர்தல் ஒத்திவைக்கப்படுகிறது எனக் கூறப்பட்டிருந்தது.

இதையடுத்து, வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட நிலையிலே, பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தல்கள் ரத்து செய்யப்பட்டன. அதன் பிறகு, பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்துக்கான தேர்தல் நடத்த எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என்று பால் உற்பத்தியாளர்கள் குற்றம்சாட்டினர்.

இதனால், பால் கூட்டுறவு சங்கங்களின் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்த முடியாத சூழல் இருக்கிறது. லிட்டருக்கு ரூ.21 வரை கொள்முதல் அறிவித்தாலும், அவர்கள் குறிப்பிட்ட கொழுப்புச்சத்து கொண்ட பாலை அளித்தாலும் ரூ.16 முதல் ரூ.18 வரை சராசரியாகக் கணக்கிட்டே பால் கொள்முதல் செய்கின்றனர்.

மேலும், பாகூர் பால் கூட்டுறவு சங்கத்தில் பாலை கிலோ கணக்கில் கொள்முதல் செய்துவிட்டு, லிட்டர் கணக்கில் பணம் தருகின்றனர். அதேபோல, பால் உற்பத்தியாளர்களுக்கு வழங்கப்பட்டுவந்த தீவனத்தின் விலையும் கடுமையாக உயர்ந்துவிட்டது. தற்போது தீவனம் மூட்டைக்கு ரூ.818 வரை செலவிட வேண்டியிருக்கிறது. மேலும் பால் கூட்டுறவு சங்கங்களே நேரடியாக ஈடுபடும் பால் விற்பனைக்கான ரசீதையும் முறையாக வழங்கவில்லை.

எனவே, இதுபோன்ற பிரச்னைகளைத் தீர்த்துக்கொள்ள கூட்டுறவு சங்கங்களுக்குத் தேர்தல் நடத்தப்பட்டு, தலைவர், இயக்குநர்களை ஜனநாயக ரீதியில் நியமிக்க வேண்டுமென்று பால் உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆனால், கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கங்களுக்கு மூவர் குழுவை அரசு திடீரென நியமித்திருக்கிறது. இதில், ஒரு தலைவர், இரு இயக்குநர்கள் இருப்பர். இவர்களை எவ்விதத் தேர்தலுமின்றி, ஆளும் கட்சி நபர்களை நேரடியாக அரசு நியமிக்கிறது. 5 சங்கங்களுக்கு மூவர் குழுக்கள் நியமிக்கப்பட்ட நிலையில், இக்குழு நியமனத்துக்கு பால் உற்பத்தியாளர் சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

 இதுதொடர்பாக, புதுச்சேரி மாநில பால் உற்பத்தியாளர்கள் சங்க பொதுச் செயலர் ஏ.பெருமாள் கூறியது:

மூவர் குழுக்களை நியமிப்பதன் மூலம் பால் உற்பத்தியாளர் சங்கங்களில் ஜனநாயகம் இருக்காது. ஏற்கெனவே சங்கங்களது செயல்பாடுகளைத் தடுக்க முடியாத சூழல் இருக்கிறது. இதனால் பால் உற்பத்தியாளர்கள் கடும் சிரமத்தைச் சந்தித்து வருகின்றனர். இதில், நேரடியாக தலைவர், இயக்குநர்கள் நியமிப்பது, பால் உற்பத்தியாளர்களுக்கு எவ்விதத்திலும் நன்மை அளிக்காது. எனவே, ஜனநாயக ரீதியில் உறுப்பினர்களைக் கொண்டு தேர்தல் நடத்தி, புதிய தலைவர், இயக்குநர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.