புதுச்சேரி அருகே காட்டேரிக்குப்பம் காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட பகுதிகளில் 7 இடங்களில் கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்பட்டு அவை சனிக்கிழமை முதல் இயக்கி வைக்கப்பட்டன.
புதுச்சேரியில் தொடர் கொலை, திருட்டு, வழிப்பறி போன்ற சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. இதனை தடுக்கும் வகையில் ஆளுநர் கிரண் பேடி போலீஸ் உயரதிகாரிகளை அழைத்து ஆலோசனை நடத்தினார்.
இதையடுத்து மேற்கு காவல் கண்காணிப்பாளர் குணசேகரன் குற்றச் சம்பவங்களை தடுக்க தெற்குப் பகுதி எல்லைக்கு உள்பட்ட காவல் நிலையங்களில் விழிப்புணர்வுக் கூட்டங்களை நடத்தினார். மேலும், குற்றச் சம்பவங்களை தடுக்க ஒவ்வொரு பகுதியிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி, எல்லைப் பகுதியான காட்டேரிக்குப்பம் காவல் நிலையத்துக்கு உள்பட்ட சுத்துக்கேணி, லிங்காரெட்டிப்பாளையம், காட்டேரிக்குப்பம், சந்தைபுதுக்குப்பம் உள்பட 7 இடங்களில் தன்னார்வலர்கள் உதவியுடன் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டன.
இவற்றை மேற்கு காவல் கண்காணிப்பாளர் குணசேகரன், திருக்கனூர் காவல் ஆய்வாளர் சண்முகசுந்தரம் ஆகியோர் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக இயக்கி வைத்தனர். இதற்கு உதவிய தன்னார்வ தொண்டு நிறுவனங்களை போலீஸார் பாராட்டினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.