புதுவை ஜிப்மரில் நரம்பியல் சிறப்பு சிகிச்சை மையம் விரைவில் தொடங்கப்படவுள்ளதாக அதன் இயக்குநர் சுபாஷ் சந்திர பரிஜா தெரிவித்தார்.
வலிப்பு நோய்க்கு எதிரான சர்வதேச குழுமம் மற்றும் சர்வதேச அரசுத் துறைகள் கூட்டாக இணைந்து சர்வதேச வலிப்பு தினத்தை பிப்ரவரி 2-ஆவது திங்கள்கிழமை கடைப்பிடித்து வருகின்றன.
அதன்படி, சர்வதேச வலிப்பு நோய் தினத்தையொட்டி ஜிப்மரில் சனிக்கிழமை நடைபெற்ற வலிப்பு நோய்க்கான நவீன சிகிச்சை முறைகள் குறித்த தேசிய அளவிலான கருத்தரங்கை தொடங்கிவைத்து அதன் இயக்குநர் சுபாஷ் சந்திர பரிஜா பேசியதாவது:
ஜிப்மர் மருத்துவமனை வலிப்பு நோயாளிகளுக்கு ஒருங்கிணைக்கப்பட்ட சிகிச்சையை அளிப்பதுடன் பொதுமக்களுக்கு வலிப்பு நோய் குறித்த விழிப்புணர்வையும் தொடர்ந்து வழங்கி வருகிறது. அதன் மூலம்
வலிப்பு நோய் குறித்த மக்களின் பார்வையை ஆரோக்கியமாக மாற்றி வருகிறது.
மேலும், வலிப்பு நோயால் ஏற்படும் சமூக மற்றும் பொருளாதாரச் சிக்கல்களை பல துறை வல்லுநர்கள் கொண்ட சிகிச்சைக் குழு மூலம் ஜிப்மர் வலிப்பு நோயாளிகளுக்கு அளித்து அவர்களது வாழ்க்கைத் தரத்தை முன்னேற்ற முனைப்புடன் செயல்பட்டுவருகிறது.
ஜிப்மரில் நரம்பியல் சிறப்பு சிகிச்சை மையம் விரைவில் தொடங்கப்படவுள்ளது. இந்த மையம் மூலம் நரம்பியல் தொடர்பான பல்வேறு நோய்களுக்கு ஜிப்மர் உயர்தரமான சிகிச்சையை ஒருகுடையின் கீழ் வழங்க உள்ளது என்றார்.
கருத்தரங்கில் ஜிப்மர் கல்லூரி முதல்வர் மருத்துவர் சுவாமிநாதன், ஜிப்மர் மருத்துவ கண்காணிப்பாளர் மருத்துவர் அசோக் சங்கர் படே, நரம்பியல்துறை தலைவர் பிரதீப் நாயர், புதுதில்லி இந்திய வலிப்பு நோய் மையத்தின் நிர்வாக உறுப்பினர் மஞ்சரி திரிபாதி, பேராசிரியர்கள் விவேக் மேத்யூ, சுநிதீ மணி, மகாதேவன், கோபாலகிருஷ்ணன், தனபதி, லட்சுமி உள்ளிட்டோர் வலிப்பு நோய் குறித்து பல்வேறு தலைப்புகளில் பேசினர்.
மாணவ, மாணவிகளுக்காக வலிப்பு நோய் தொடர்பான வினாடி-வினா போட்டி நடத்தி பரிசுகள் வழங்கப்பட்டன. துணைப் பேராசிரியை ராஜேஸ்வரி நன்றி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.