புதுவைக்கு தனி மாநில தகுதி கோரி திமுக இதுவரை வலியுறுத்தியதில்லை என்று அதிமுக குழுத் தலைவர் ஆ.அன்பழகன் தெரிவித்தார்.
சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை அவர் அளித்த பேட்டி:
மத்தியிலும், மாநிலத்திலும் திமுக ஆட்சி அதிகாரத்தில் இருந்த போது புதுவைக்கு மாநில தகுதி பெறுவது சம்பந்தமாக எந்தவொரு சிறு நடவடிக்கையும் எடுத்தது இல்லை.
தற்போது நிலவி வரும் அரசியல் சூழ்நிலையில் புதுவைக்கு மாநில தகுதி தேவை என்னும் நிலையை அதிமுக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் எடுத்துள்ளன.
இதில் ஆளும் அரசு ஒரு நிலைபாட்டை எடுத்து வரும் சூழ்நிலையில், சட்டப்பேரவையில் நடைபெற்ற தனிநபர் தீர்மானங்களின் உண்மை நிலையை மூடி மறைத்து திமுக செயல் தலைவர்
ஸ்டாலின் மக்களிடையே ஒரு பொய் தோற்றத்தை ஏற்படுத்தும் விதத்தில் மாநில தகுதி சம்பந்தமாக அக்கறை கொண்ட கட்சியாக திமுக இருப்பது போன்ற தவறான தகவலை தெரிவித்துள்ளார்.
கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக மத்தியில் ஆட்சியில் இருந்த திமுக புதுவைக்கு மாநில தகுதி பெற மத்திய அரசை ஒருபோதும்
வற்புறுத்தியது இல்லை.
அதே போல் புதுவையில் ஆட்சியில் இருந்த திமுக ஒருமுறை கூட மத்திய அரசை வலியுறுத்தி தீர்மானத்தை நிறைவேற்றியது கிடையாது. காங்கிரஸ், திமுகவும் நினைத்திருந்தால் எப்போதோ புதுவைக்கு மாநில தகுதி பெற்றிருக்கலாம்.
சட்டப்பேரவை கூட்டத்தில் கொண்டு வரப்பட்ட தனி நபர் தீர்மானத்தை அதிமுக தான் முதலில் கொண்டு வந்தது. ஆனால், திமுக கொண்டு வந்த தனி நபர் தீர்மானத்தை அரசு ஏற்றுக்கொண்டு மாநில தகுதி உடனே வழங்க வேண்டும் என திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கூறியிருப்பது ஒரு நாடகம் ஆகும். திமுகவின் செயல்படாத இந்த இரட்டை நிலைபாட்டை புதுவை மக்கள் நம்ப மாட்டார்கள் என்றார் அன்பழகன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.








