புதுச்சேரி ரயில் நிலையத்தில் திருச்சி கோட்ட ரயில்வே பொது மேலாளர் மனீஷ் அகர்வால் சனிக்கிழமை ஆய்வு செய்தார்.
சிறப்பு ரயில் மூலம் விழுப்புரம் வழியாக புதுச்சேரி ரயில் நிலையத்திற்கு வந்து ஆய்வு செய்தார். அப்போது, ரயில் நிலையத்தில் உள்ள மூன்று நடை மேடைகள், டிக்கெட் கொடுக்கும் இடம், பயணிகள் தங்கும் அறை, டிக்கெட் பரிசோதகர் அறை, நீட்டிக்கப்பட உள்ள சர்வீஸ் லைன் உள்ளிட்ட இடங்களுக்கு சென்று பார்வையிட்டார். அப்போது ரயில் நிலைய கண்காணிப்பாளர் தங்கராசு மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.
இதையும் படிக்க | கூத்தாநல்லூரில் 5 இடங்களில் கிராம சபைக் கூட்டம்
பின்னர், அவர் நிருபர்களிடம் கூறியதாவது: புதுச்சேரி முக்கியமான ஒரு ரயில் நிலையமாக உள்ளது. சுற்றுலா பயணிகள் அதிகம் வந்து செல்லக் கூடிய இடமாகவும், வரலாற்றுச் சிறப்புமிக்க பகுதியாக புதுச்சேரி உள்ளது. இதனால் இங்கு என்ன வசதிகள் உள்ளது. மேலும், என்ன வசதிகள் ஏற்படுத்தி தரலாம் என்று ஆய்வு செய்தேன். ஏற்கெனவே பல வசதிகள் உள்ளது. இருப்பினும், கூடுதலாக சில வசதிகள் செய்து கொடுக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
புதிய திட்டங்கள் ஏதும் தற்போது இல்லை. புதுச்சேரி-கடலூர் ரயில் பாதை திட்டத்திற்கு இதுவரை அனுமதி கிடைக்கவில்லை. காரைக்கால் – பேரளம் ரயில் பாதை அமைக்கும் திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் மாநில அரசு தொடர்பான சில பிரச்னைகள் உள்ளன. அதனால் பணிகள் முழுமை பெறவில்லை. இதுதொடர்பான மாநில அரசுடன் பேசி வருகிறோம் என்றார்.