புதுச்சேரியில் ரௌடிகளின் வீடுகளில் வெடிகுண்டு சோதனை
புதுச்சேரியில் வெடி குண்டு வீசி ரௌடிகள் 2 பேர் கொலை செய்யப்பட்ட பகுதியில், போலீசார் வீடுவீடாக சென்று சனிக்கிழமை வெடிகுண்டு சோதனையில் ஈடுபட்டனர்.
புதுச்சேரி வாணரப்படை பகுதியைச் சேர்ந்தவர் ரௌடி பாம் ரவி. இவர் கடந்த அக். 24 ஆம் தேதி வெடிகுண்டு வீசி கொலை செய்யப்பட்டார். அவருடன் இருந்த நண்பர் ஒருவரும் படுகொலை செய்யப்பட்டார். இவ்வழக்கு தொடர்பாக ஆறு பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இரண்டு பேர் சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.
புதுச்சேரியில் தொடர்ந்து வரும் கொலை சம்பவம் விமர்சனத்தை ஏற்படுத்தியதால், இது தொடர்பாக டிஜிபி தலைமையில் ஆலோசனை நடத்திய உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், ரௌடிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க அண்மையில் உத்தரவிட்டார். இதனையடுத்து கொலை வழக்கில் தொடர்புடைய ரௌடிகள் வீடுகள் மற்றும் சந்தேகத்துக்கிடமானவர்களின் வீடுகளில் முதலியார்பேட்டை போலீசார் சனிக்கிழமை காலை திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
புதுச்சேரி முதுநிலை காவல் கண்காணிப்பாளர் லோகேஸ்வரன், எஸ் பி ஜிந்தா கோதண்டராமன் தலைமையில் வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாயுடன் 50க்கும் மேற்பட்ட போலீசார் இந்த சோதனையில் ஈடுபட்டனர். இதனால் புதுச்சேரி வாணரப்படை பகுதியில் பரபரப்பு காணப்பட்டது. ஒரு மணி நேரம் நடைபெற்ற இந்த சோதனையில் வெடிகுண்டு ஏதும் கைப்பற்றப் படவில்லை. இருப்பினும் ரௌடிகள் வீடு மற்றும் சந்தேகத்திற்கு இடமானவர்களின் வீடுகளில் போலீசார் எச்சரிக்கை விடுத்தனர்.
இதனிடையே சிறைச்சாலையிலிருந்து இந்த கொலைக்கான உத்தரவை பிறப்பித்த ரௌடி வினோத்திற்கு, பிரான்ஸிலிருந்து இளைஞர் ஒருவர் பணம் உதவி செய்துள்ளார். அவர் மீதும் முதலியார்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர்.