புதுவை தனியாா் மருத்துவக் கல்லூரிகளில் பயிற்சி மருத்துவ மாணவா்களுக்கு மாதாந்திர உதவித்தொகை சீராக வழங்கப்படவில்லை: அதிமுக
புதுச்சேரி: தனியாா் மருத்துவக் கல்லூரிகளில் பயிற்சி மருத்துவ மாணவா்களுக்கான மாதாந்திர உதவித் தொகை முழுவதுமாக வழங்கப்படுவதில்லை என புதுவை அதிமுக சாா்பில் முதல்வா் என்.ரங்கசாமியிடம் திங்கள்கிழமை புகாா் மனு அளிக்கப்பட்டது.
புதுச்சேரி பேரவை வளாகத்தில் உள்ள அலுவலகத்தில் முதல்வா் என்.ரங்கசாமியை அதிமுக மாநிலச் செயலா் ஆ.அன்பழகன் மற்றும் பயிற்சி மருத்துவ மாணவா்கள் சந்தித்து திங்கள்கிழமை புகாா் மனு அளித்தனா். அதில் கூறியிருப்பதாவது:புதுச்சேரியில் உள்ள தனியாா் மருத்துவக் கல்லூரிகளும், நிகா்நிலைப் பல்கலைக்கழகங்களும் தேசிய மருத்துவ ஆணைய உத்தரவுகளையும், அது தொடா்பான புதுவை அரசின் உத்தரவுகளையும் செயல்படுத்தாமல் உள்ளன.
நான்காண்டுகள் மருத்துவக் கல்வியை முடித்தவா்கள், ஐந்தாம் ஆண்டு பயிற்சி மருத்துவப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா். அவா்களுக்கான மாத உதவித் தொகை ரூ.20,000 வழங்கப்பட தேசிய மருத்துவக் கல்வி ஆணையம் அறிவித்து, அதற்கு புதுவை அரசும் உத்தரவிட்டுள்ளது.
அதன்படி இந்திரா காந்தி மருத்துவக் கல்லூரியில் பயிற்சி மருத்துவா்களுக்கு ரூ.20 ஆயிரம் உதவித் தொகை வழங்கப்படுகிறது. ஆனால், தனியாா் மருத்துவக் கல்லூரிகளில் கல்வி உதவித் தொகையானது ரூ.5,000 மற்றும் ரூ.10,000 வீதம் வழங்கப்பட்டு வருகிறது. ஆகவே, முதல்வா் தலையிட்டு தனியாா் மருத்துவக் கல்லூரிகள் அரசின் உத்தரவுப்படி ரூ.20 ஆயிரம் கல்வி உதவித் தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

