ரூ.1.5 கோடியில் சாலை அமைப்புப் பணி: அமைச்சா் தொடங்கி வைத்தாா்
புதுச்சேரி மங்கலம் தொகுதியில் ரூ.1.5 கோடி திட்ட மதிப்பீட்டில் சாலை அமைக்கும் பணியை வேளாண்துறை அமைச்சா் தேனி சி. ஜெயக்குமாா் வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா்.
புதுச்சேரியை அடுத்த வில்லியனூா் கொம்யூன் பஞ்சாயத்து, மங்கலம் தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் தாா்ச் சாலை, சிமென்ட் சாலை அமைக்க ஒரு கோடியே ஐம்பது லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் திட்டமிடப்பட்டுள்ளது.
அதன்படி, கண்ணகி நகா் உள்புறம் சிமென்ட் சாலை மற்றும் வாய்க்கால் அமைத்தல், செல்வா நகரில் விடுபட்ட சாலைகளுக்கு மண்ணடித்து கருங்கல் ஜல்லியிடுதல், மூகாம்பிகை நகரில் விடுபட்ட சாலைகளுக்கு கருங்கல் ஜல்லி இடுதல், அரியூா் தாமரை நகா், பாரதி நகா் உள்புறம் சிமென்ட் சாலை மற்றும் வாய்க்கால் அமைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெறவுள்ளன.
இதற்கான திட்டப்பணி தொடக்க நிகழ்வில் உதவிப் பொறியாளா் சத்திய நாராயணன், இளநிலைப் பொறியாளா் ரங்கமன்னாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
