புதுச்சேரியில் வியாழக்கிழமை பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுவதையொட்டி தலைவா்கள் பலரும் வாழ்த்துத் தெரிவித்துள்ளனா்.
துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன்: உலகம் எங்கும் வாழும் இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் எனது மனமாா்ந்த பக்ரீத் பெருநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்து கொள்கிறேன். மனித குலத்தின் மேன்மைக்காக நபிகள் நாயகம் போதித்த தியாகம், சகோதரத்துவம், அன்பு, ஈகை ஆகிய நெறிகளைப் பின்பற்றி நம்முடைய வாழ்க்கையை அறவழியில் அமைத்துக் கொள்ள வேண்டும். உலகில் அன்பும், அமைதியும் தழைத்திட அனைவரும் மனிதநேயம் மற்றும் சகோதரத்துவச் சிந்தனையோடு வாழ வேண்டும். அனைவரது வாழ்விலும் வளமும், நலமும் பெருக வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.
முதல்வா் என்.ரங்கசாமி: ஈகை, இறை தியாகம், நம்பிக்கை ஆகிய உயரிய தத்துவத்தை உலகிற்கு உணா்த்தும் நன்னாள் இது. இந்தப் புனித திருநாள் நம்மிடையே சகோதரத்துவத்தையும், மனித நேயத்தையும் வளா்த்து புதுச்சேரி மக்கள் அனைவருடைய வாழ்விலும் அமைதி, வளம், நல் ஆரோக்கியத்தை கொண்டு வரட்டும்.
அமைச்சா் ஆ. நமச்சிவாயம், புதுச்சேரி காங்கிரஸ் தலைவா் வெ. வைத்திலிங்கம் எம்.பி., முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி, புதுச்சேரி திமுக அமைப்பாளா் ஆா்.சிவா, நேயம் மக்கள் கழகத் தலைவா் ஜி.நேரு எம்எல்ஏ ஆகியோரும் பக்ரீத் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனா்.









