விக்கிரவாண்டி அருகே தேசிய நெடுஞ்சாலையில் கரும்பு ஏற்றிச் சென்ற டிராக்டர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
விழுப்புரம் மாவட்டம், வளவனூர் அருகேயுள்ள தாதாம்பாளையம் பகுதியில் இருந்து கரும்பு ஏற்றிக்கொண்டு டிராக்டர் ஒன்று, புதன்கிழமை பிற்பகல் கோலியனூர் வழியாக முண்டியம்பாக்கத்தில் உள்ள தனியார் சர்க்கரை ஆலைக்குச் சென்று கொண்டிருந்தது.
பிற்பகல் 3.45 மணி அளவில், சர்க்கரை ஆலை எதிரே உள்ள மேம்பாலத்தில் ஏறி இறங்கும்போது, டிராக்டருக்கும் டிப்பருக்கும் இடையேயான இரும்பு முறிந்தது. இதனால், நிலை தடுமாறிய டிராக்டர் டிப்பர் அந்த பகுதியில் கவிழ்ந்தது.
இதனால், சுமார் 10 டன் கரும்பு கட்டுகள் சாலையில் சரிந்தன.
சாலை முழுவதும் கரும்பு கட்டுகள் கொட்டிக்கிடந்ததால், அந்த வழியே போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால், திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
தகவல் அறிந்து விக்கிரவாண்டி காவல் ஆய்வாளர் இளஞ்செழியன், உதவி காவல் ஆய்வாளர்கள் பாலமுருகன், சுப்பையா உள்ளிட்டோர் நிகழ்விடத்துக்கு வந்து, கொட்டிக் கிடந்த கரும்புகளை சாலையில் இருந்து அப்புறப்படுத்தும் பணியை முடுக்கிவிட்டனர்.
தகவல் அறிந்து நிகழ்விடத்துக்கு வந்த எஸ்.பி. ஜெயக்குமார், அணி வகுத்து நின்ற வாகனங்களை அணுகு சாலையில், திருப்பிவிட ஏற்பாடு செய்தார். கரும்புகள் அனைத்தும் அப்புறப்படுத்தப்பட்ட பின்னர், போக்குவரத்து சீரானது.
விபத்து காரணமாக, சுமார் ஒரு மணி நேரம் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால், வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.