
வீட்டுக்குள் புகுந்து நகை, பணம் கொள்ளை: 5 பேர் கும்பலுக்கு வலை
கள்ளக்குறிச்சி அருகே வீட்டுக்குள் புகுந்து இருவரை தாக்கிவிட்டு நகை, பணம் கொள்ளையடித்த மர்ம நபர்கள் 5 பேரை போலீஸார் தேடி வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி அருகே வீட்டுக்குள் புகுந்து இருவரை தாக்கிவிட்டு நகை, பணம் கொள்ளையடித்த மர்ம நபர்கள் 5 பேரை போலீஸார் தேடி வருகின்றனர்.
கள்ளக்குறிச்சியை அடுத்த நல்லாத்தூர் பேருந்து நிறுத்தம் பகுதியைச் சேர்ந்த வேலு மனைவி கண்ணகி (53). வேலு இறந்துவிட்டார். இவர்களுக்கு சத்தியராஜ் (32), மணிகண்டன் (29) ஆகிய 2 மகன்களும் தனலட்சுமி (25) என்ற மகளும் உள்ளனர். சத்தியராஜின் மனைவி சுகுணா (26). சத்தியராஜ் கச்சிராயப்பாளையத்தில் ஒரு மருத்துவரிடம் கார் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். மணிகண்டன் சென்னையில் உள்ளாராம்.
சத்தியராஜ் திங்கள்கிழமை வழக்கம்போல பணிக்குச் சென்றுவிட்டார். அன்று இரவு 9.30 மணியளவில் கண்ணகி தனது வீட்டில் உணவருந்தினார். தனலட்சுமி, சுகுணா ஆகியோர் வீட்டில் ஓர் அறையில் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது, வேலுவின் தம்பி ஏழுமலை (47) அங்குவந்து கண்ணகியிடம் பேசிக் கொண்டிருந்தார். சிறிது நேரத்தில் வீட்டுக்குள் மர்ம நபர்கள் 5 பேர் புகுந்தனர். அவர்களில் ஒருவர் கண்ணகியை தாக்கியதில் அவர் மயங்கினார். பின்னர் அவரது காதில் அணிந்திருந்த தங்கக் கம்மலை பறித்தனர். இதை ஏழுமலை தட்டிக்கேட்டபோது, மர்ம கும்பலைச் சேர்ந்தவர் கத்தியால் அவரது நெற்றியில் தாக்கியதில் காயமடைந்தார். பின்னர் இருவரையும் கட்டிப்போட்டு விட்டனர். பின்னர் மர்ம கும்பலைச் சேர்ந்தவர்கள் பர்சில் வைத்திருந்த ரூ.20
ஆயிரம் பணத்தை எடுத்துக் கொண்டனராம்.
கூச்சல் சப்தம் கேட்டு, மற்றொரு அறையில் தூங்கிக்கொண்டிருந்த தனலட்சுமி, சுகுணா இருவரும் எழுந்து பார்த்தனர். மர்ம நபர்கள் அவர்களது அறைக்குள் நுழைந்து, சுகுணா வைத்திருந்த ரூ.40 ஆயிரம் பணம், தனலட்சுமி அணிந்திருந்த நகையை பறித்துக்கொண்டனராம். மேலும், சுகுணா அணிந்திருந்த வெள்ளிக் கொலுசு, அங்கிருந்த மடிக்கணினி உள்ளிட்டவற்றை எடுத்துக் கொண்டு தனலட்சுமி, சுகுணா இருவரையும் கட்டுப்போட்டு வெளியேறினராம்.
பின்னர் அந்த கும்பல் வீட்டின் வெளியே நிறுத்தியிருந்த கண்ணகி குடும்பத்தினருக்குச் சொந்தமான மொபெட்டையும் திருடிக்கொண்டு சென்றனராம். சிறிது தூரம் சென்றவர்கள் மொபெட்டில் பெட்ரோல் இல்லாததால் அதை அங்கேயே விட்டுவிட்டு தப்பினர். காயமடைந்த இருவரும் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.
கள்ளக்குறிச்சி காவல் துணைக் கண்காணிப்பாளர் ந.ராமநாதன், கச்சிராயப்பாளையம் காவல் ஆய்வாளர் செ.வள்ளி மற்றும் போலீஸார் சம்பவ இடத்தில் நேரில் விசாரணை நடத்தினர். சம்பவம் குறித்து கச்சிராயப்பாளையம் போலீஸார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





