தமிழகத்தில் நடிகர்கள் தொடங்கும் கட்சிகள் விரைவில் காணாமல் போகும் என்று விழுப்புரம் மாவட்ட அதிமுக செயலர் இரா.லட்சுமணன் எம்.பி. தெரிவித்தார்.
வானூர் அருகே உள்ள புளிச்சப்பள்ளத்தில், வானூர் தொகுதி அதிமுக சார்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 70-ஆவது பிறந்த நாள் விழா பொதுக் கூட்டம், நல உதவிகள் வழங்கும் விழா செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது. வானூர் சட்டப்பேரவை உறுப்பினர் சக்கரபாணி தலைமை வகித்தார். தொகுதிச் செயலாளர் வி.எம்.ஆர் சிவா முன்னிலை வகித்தார். தலைமைக் கழகப் பேச்சாளர் மதியழகன் தொடக்க உரையாற்றினார்.
விழுப்புரம் மாவட்ட செயலாளர் இரா.லட்சுமணன் எம்.பி. பங்கேற்று பொது மக்களுக்கு வேட்டி, சேலை, வீட்டு உபயோகப் பொருள்களை நல உதவிகளாக வழங்கி பேசியதாவது:
எம்ஜிஆர் மறைவுக்குப் பிறகு கட்சியையும், ஆட்சியையும் நல்வழிப்படுத்தி தமிழக மக்களுக்கு குறிப்பாக விவசாயிகள், மாணவர்கள், பெண்களுக்கு வரலாற்றுச் சிறப்புமிக்க நலத் திட்டங்களை வழங்கி பெருமை சேர்த்தவர் ஜெயலலிதா.
காவிரி நீர் பிரச்னை, ஈழத் தமிழர் பிரச்னை உள்ளிட்ட தமிழர்கள் பிரச்னைக்கு கம்பீரமாக குரல் கொடுத்து பாடுபட்டவர். இந்திய அளவில் 3ஆவது பெரிய கட்சியாக நாடாளுமன்றத்தில் அதிமுகவின் பலத்தை உயர்த்திக் காட்டியவர். அவரது மறைவுக்குப் பிறகு கட்சி, ஆட்சியை கலைத்துவிடலாம் என்று பலர் கனவு காண்கின்றனர். அது பகல் கனவாகவே முடியும். இந்த ஆட்சி ஐந்தாண்டுகள் முழுமையாக நிறைவு செய்யும். மீண்டும் இபிஎஸ், ஓபிஎஸ் தலைமையில் அதிமுக ஆட்சி அமையும். தற்போது நடிகர்கள் தொடங்கும் கட்சிகள் விரைவில் காணாமல் போகும் என்றார்.
கூட்டத்தில் அதிமுக ஒன்றியச் செயலாளர் சதிஷ்குமார், மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணைச் செயலர் மணிபாலன், முன்னாள் ஊராட்சித் தலைவர் குமார், பேரவைச் செயலர் கண்ணன், எம்ஜிஆர் மன்ற துணைச் செயலர் ராதாகிருஷ்ணன், ஒன்றிய பொருளர் சுகுமாரன், துணைச் செயலர் பழனி, மாவட்ட மாணவரணி இணைச் செயலர் சசிக்குமார், மாவட்ட மகளிர் அணி துணைச் செயலர் தனம், கிளியனூர் ஒன்றிய துணைச் செயலர் ஜெயமூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.