ஆரோவில் சர்வதேச நகரம் உதயமான 50-ஆவது ஆண்டையொட்டி, அங்குள்ள மாத்ரி மந்திர் தியான மையத்தில் புதன்கிழமை அதிகாலை தீ மூட்டி, கூட்டுத் தியானம் நடைபெற்றது. இதில் வெளிநாட்டினர் ஏராளமானோர் பங்கேற்றனர்.
விழுப்புரம் மாவட்டம், ஆரோவிலில் உலக மனிதர்களின் ஒற்றுமைக்கு அடையாளமாக, அனைத்துத் தரப்பு மக்களும் சங்கமிக்கும் விதத்தில் சர்வதேச நகரம் அரவிந்தரின் விருப்பத்தின்பேரில் 1968-ஆம் ஆண்டு, பிப்ரவரி 28-ஆம் தேதி உருவாக்கப்பட்டது.
இதற்காக, 1966-ஆம் ஆண்டு ஆரோவில் குறித்த திட்டம் யுனெஸ்கோ பொது சபையில், முன்வைக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டது. இதையடுத்தே, அரவிந்தரின் சீடரான அன்னை மீராவின் முயற்சியால் ஆரோவில் சர்வதேச நகரம் உதயமானதாகக் கூறப்படுகிறது. ஆரோவில் சர்வதேச நகரம் உதயமான 50-ஆம் ஆண்டு பொன்விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது. இதற்காக, ஆரோவில் மாத்ரி மந்திர் தியான மண்டபத்தில் ஆம்பி தியேட்டர் என்றழைக்கப்படும் திறந்த வெளி அரங்கில், அதிகாலை 4.30 மணிக்கு தீ மூட்டப்பட்டு (போன் ஃபயர்) விழா தொடங்கியது.
இதில் தமிழகம், புதுவை உள்ளிட்ட மாநிலங்கள் மற்றும் வெளி நாடுகளைச் சேர்ந்தவர்கள் என ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு கூட்டு தியானம் செய்தனர். போன் ஃபயர் என்ற பெரும் தீப்பிழம்பின் பின்னணியில், மாத்திர் மந்திர் தியான மையத்தில் உள்ள உலக உருண்டை (குளோப்) தங்க நிறத்தில் ஜொலித்தது.
இதைத் தொடர்ந்து, நீருக்கு எல்லை இல்லை என்பதன் நினைவுகூரும் வகையில், பல்வேறு நாடுகளில் இருந்து கொண்டு வரப்பட்ட நதிகளின் நீரை, குடுவைகளில் எடுத்துச் சென்று, அங்குள்ள தாமரைக் குளத்தில் ஊற்றி பிரார்த்தனை செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.