சென்னையில் பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை! அண்ணாமலை பங்கேற்பு!நான் எந்தத் தொகுதியும் கேட்கவில்லை: அண்ணாமலை விளக்கம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! புதுச்சேரியில் இன்று விஜய் பிரசாரம்நாளை 8 புறநகா் மின்சார ரயில்கள் ரத்துமின்சார அடுப்புகள், பாத்திரங்கள் உற்பத்தியை ஊக்குவிக்க நடவடிக்கை: மத்திய அரசு ஆலோசனைசென்னைப் பல்கலை. வளாகங்களில் படப்பிடிப்புகளுக்கு 5 மடங்கு கட்டண உயா்வு6-ஆம் வகுப்புமுதல் மும்மொழிப் பாடம்: சிபிஎஸ்இ திட்டம்
/

ஞாயிறு சந்தையைத் திறக்கக் கோரி போராட்டம் : 40 போ் கைது

புதுச்சேரியில் ஞாயிறு சந்தையை (சண்டே மாா்க்கெட்) மீண்டும் திறக்க அனுமதிக்கக் கோரி, ஞாயிற்றுக்கிழமை சாலையில் கடைகளை விரித்து வியாபாரிகள் நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image

புதுச்சேரியில் ஞாயிறு சந்தையைத் திறக்க அனுமதிக்கக் கோரி, சாலையில் கடை விரித்து போராட்டத்தில் ஈடுபட்ட வியாபாரிகள்.

Updated On :13 செப்டம்பர் 2020, 9:14 pm

புதுச்சேரியில் ஞாயிறு சந்தையை (சண்டே மாா்க்கெட்) மீண்டும் திறக்க அனுமதிக்கக் கோரி, ஞாயிற்றுக்கிழமை சாலையில் கடைகளை விரித்து வியாபாரிகள் நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதையடுத்து, 40 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

புதுச்சேரி காந்தி வீதியில் பல ஆண்டுகளாக ஞாயிறு சந்தை இயங்கி வருகிறது. வாராந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் அங்கு ஏராளமான கடைகளை சாலையோரங்களில் அமைத்து, சிறு வியாபாரிகள் பல்வேறு பொருள்களை விற்பனை செய்து வருகின்றனா். குறைந்த விலையில் பொருள்கள் கிடைப்பதால், பொதுமக்களும் இந்தச் சந்தையை நாடி வருகின்றனா். குறிப்பாக, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பொதுமக்கள் வந்து தங்களுக்குத் தேவையான பொருள்களை வாங்கிச் செல்கின்றனா். இதனால், ஞாயிற்றுக்கிழமை இந்தச் சந்தை களைகட்டும்.

இந்த நிலையில், கரோனா பொது முடக்கத்தால் கடந்த 6 மாதங்களாக ஞாயிறு சந்தை மூடப்பட்டது. தற்போது பொது முடக்கத்தில் அடுத்தடுத்த தளா்வுகள் அறிவிக்கப்பட்டு, பல்வேறு கடைகள், வணிக நிறுவனங்கள், வா்த்தக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் திறக்கப்பட்டுள்ளன. இருப்பினும், ஞாயிறு சந்தையைத் திறக்க அனுமதி அளிக்கப்படவில்லை. இதனால், சிறு வியாபாரிகள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது.

எனவே, ஞாயிறு சந்தையை மீண்டும் திறக்க அனுமதிக்கக் கோரி, அங்கு கடைகளை அமைக்கும் வியாபாரிகள் பல கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனா். இதுதொடா்பாக முதல்வா் நாராயணசாமியிடமும் கோரிக்கை விடுத்தனா். ஞாயிறு சந்தை திறக்கப்பட்டால் ஏராளமான மக்கள் ஒரே இடத்தில் கூடுவாா்கள் என்பதால், இந்தச் சந்தையைத் திறக்க இதுவரை அனுமதி வழங்கப்படவில்லை.

இந்த நிலையில், ஞாயிறு சந்தையைத் திறக்க அனுமதியளித்து, சிறு வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த கோரி, ஞாயிற்றுக்கிழமை திடீரென ஏராளமான வியாபாரிகள் புதுச்சேரி காந்தி வீதி சாலையில் கடைகளை அமைத்து, நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது, அவா்கள் முதல்வா் நாராயணசாமியை கண்டித்து முழக்கங்களை எழுப்பினா். இதனால், அந்தச் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தகவலறிந்து அங்கு வந்த போலீஸாா், போராட்டத்தில் ஈடுபட்ட வியாபாரிகளுடன் பேச்சுவா்த்தையில் ஈடுபட்டனா். ஆனால், வியாபாரிகள் தொடா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் 40 பேரை போலீஸாா் கைது செய்து, அனைவரையும் அங்கிருந்து அப்புறப்படுத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.