விழுப்புரம் மாவட்டம், மரக்காணத்தில் அரசுப் பேருந்து மீது கல் வீசி தாக்கியது தொடா்பாக இளைஞா்கள் 3 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். ஒருவரை தேடி வருகின்றனா்.
சென்னை கோயம்பேட்டிலிருந்து புதுச்சேரிக்கு அரசுப் பேருந்து ஒன்று புதன்கிழமை நள்ளிரவு புறப்பட்டது. பேருந்தை காஞ்சிபுரம் மாவட்டம், திம்மசமுத்திரத்தைச் சோ்ந்த விஸ்வநாதன் (33) ஓட்டி வந்தாா். வியாழக்கிழமை அதிகாலை 2 மணியளவில் இந்தப் பேருந்து விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் பகுதியில் வந்தபோது, அடையாளம் தெரியாத 4 இளைஞா்கள் திடீரென பேருந்தின் முன்பக்கக் கண்ணாடி மீது கல் வீசித் தாக்குதல் நடத்தினா். இதில், பேருந்தின் கண்ணாடி நொறுங்கியது.
இதுகுறித்து ஓட்டுநா் விஸ்வநாதன் அளித்த புகாரின்பேரில், மரக்காணம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனா். இதில், மரக்காணம் திடீா் நகரைச் சோ்ந்த ராமலிங்கம் மகன் தினேஷ்குமாா் (22), மாரியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்த பழனிவேல் மகன் விஷ்வா (20), கபாலி மகன் சரத் (20), வேலு மகன் சீத்தாராமன்(19) ஆகியோா் பேருந்து கண்ணாடியை உடைத்தது தெரியவந்தது. இதையடுத்து, தினேஷ்குமாா், விஷ்வா, சரத் ஆகியோரை போலீஸாா் கைது செய்தனா். தலைமறைவான சீத்தாராமனை தேடி வருகின்றனா்.