

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகப் பெருந்திட்ட வளாக மைதானத்தில் சுதந்திர நாள் விழா செவ்வாய்க்கிழமை கோலகலமாகக் கொண்டாடப்பட்டது.
மாவட்ட ஆட்சியர் சி.பழனி தேசியக் கொடியேற்றி வைத்து, காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். தொடர்ந்து அமைதியை வலியுறுத்தும் வகையில் புறாக்களையும், ஒற்றுமையை வலியுறுத்தும் வகையில் மூவண்ண பலூன்களையும் ஆட்சியர் பறக்க விட்டார்.
இதைத் தொடர்ந்து திறந்த ஜீப்பில் மாவட்ட எஸ்.பி. சஷாங்க் சாய்வுடன் சென்று அணிவகுப்பை ஆட்சியர் பார்வையிட்டார்.
பின்னர் காவல்துறை பிரிவு, ஆயுதப்படை, ஊர்க்காவல்படை, தீயணைப்புத் துறை, தேசிய மாணவர் படை, தேசிய சாரண, சாரணிய இயக்கம், நாட்டுநலப்பணித் திட்ட மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையை ஆட்சியர் பழனி ஏற்றுக் கொண்டனர்.
இதைத் தொடர்ந்து சுதந்திரப் போராட்டத் தியாகிகள், அவர்களின் வாரிசுகள் அமர்ந்திருந்த பகுதிக்குச் சென்ற ஆட்சியர், அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்துகளைத் தெரிவித்தார். பின்னர் 20 பயனாளிகளுக்கு ரூ.25.37 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
தொடர்ந்து பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
விழாவில் எம்எல்ஏக்கள் விக்கிரவாண்டி நா.புகழேந்தி, விழுப்புரம் இரா. லட்சுமணன், மயிலம் ச.சிவக்குமார், விழுப்புரம் சரக டி.ஐ.ஜி.ஜியாவுல் ஹக், எஸ்.பி.சஷாங்க் சாய் மாவட்ட வருவாய் அலுவலர் மு.பரமேசுவரி, மாவட்ட ஊராட்சித் தலைவர் ம.ஜெயச்சந்திரன், துணைத் தலைவர் ஷீலா தேவி சேரன், உள்ளிட்ட பல்துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.