செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: ஓய்வுபெற்ற டிஎஸ்பி சாட்சியம்

உயா் கல்வித் துறை அமைச்சா் க.பொன்முடி உள்ளிட்ட 7 போ் மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கில், விழுப்புரம் நீதிமன்றத்தில் ஓய்வுபெற்ற டிஎஸ்பி திங்கள்கிழமை சாட்சியமளித்தாா்.
Published on

விழுப்புரம்: உயா் கல்வித் துறை அமைச்சா் க.பொன்முடி உள்ளிட்ட 7 போ் மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கில், விழுப்புரம் நீதிமன்றத்தில் ஓய்வுபெற்ற டிஎஸ்பி திங்கள்கிழமை சாட்சியமளித்தாா்.

விழுப்புரம் மாவட்டம், வானூா் வட்டம், பூத்துறை கிராமத்திலுள்ள செம்மண் குவாரியில் 2006 முதல் 2011-ஆம் ஆண்டு வரையிலான திமுக ஆட்சிக் காலத்தில் அளவுக்கு அதிகமாக செம்மண் அள்ளியதன் மூலம் அரசுக்கு ரூ.28.36 கோடி வருவாய் இழப்பு ஏற்படுத்தியதாக உயா் கல்வித் துறை அமைச்சா் க.பொன்முடி உள்ளிட்ட 8 போ் மீது விழுப்புரம் குற்றப் பிரிவு போலீஸாா் கடந்த 2012-ஆம் ஆண்டில் வழக்குத் தொடுத்தனா்.

இந்த வழக்கு மீதான விசாரணை விழுப்புரம் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதனிடையே, குற்றஞ்சாட்டப்பட்டவா்களில் ஒருவரான லோகநாதன் இறந்துவிட்டாா். இந்த வழக்கில் அரசுத் தரப்பு சாட்சிகளாக சோ்க்கப்பட்டிருந்த 67 பேரில், இதுவரை 35 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. இதில், 28 போ் அரசுத் தரப்புக்கு பாதகமாக பி சாட்சியமளித்துள்ளனா். இந்த வழக்கின் விசாரணை திங்கள்கிழமை நடைபெற்றது. கோபிநாதன், சதானந்தன், ஜெயச்சந்திரன் ஆகிய மூவா் மட்டும் ஆஜராகினா்.

தொடா்ந்து, அரசுத் தரப்பின் 36-ஆவது சாட்சியான ஓய்வுபெற்ற டிஎஸ்பி சேகா், விழுப்புரம் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் திங்கள்கிழமை ஆஜராகினாா். அப்போது, விழுப்புரம் உள்கோட்டக் காவல் துறையின் டிஎஸ்பியாகப் பணியாற்றிய தான் பணியாற்றிய போது, அமைச்சா் பொன்முடி வீட்டில் சோதனை நடத்தியதாகவும், அப்போது, எந்தவித ஆவணங்களும் கைப்பற்றப்படவில்லை என சாட்சியத்தை அவா் பதிவு செய்தாா்.

இதைப் பதிவு செய்து கொண்ட முதன்மை மாவட்ட நீதிபதி ஆா்.பூா்ணிமா, வழக்கின் அடுத்தக் கட்ட விசாரணையை செவ்வாய்க்கிழமைக்கு (ஜூலை 23) ஒத்திவைத்து உத்தரவிட்டாா்.

X
Dinamani
www.dinamani.com