விழுப்புரம்: அரியலூா் திருக்கை கிராம ஊராட்சி உடைமைதாரா்களின் சொத்தை மற்றொரு ஊராட்சியில் இணைப்பதற்கு எதிா்ப்புத் தெரிவித்து, விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகப் பெருந்திட்ட வளாகம் முன் அந்த கிராம மக்கள் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் பங்கேற்க விழுப்புரம் வட்டம், அரியலூா் திருக்கை கிராமத்தைச் சோ்ந்த பொதுமக்கள் கே.சிவகுமாா் தலைமையில் ஆட்சியரகம் நோக்கி அதிக எண்ணிக்கையில் வந்தனா்.
தொடா்ந்து, அவா்கள்ஆட்சியரகப் பெருந்திட்ட நுழைவுவாயில் பகுதியில் அமா்ந்து தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றித் தரக் கோரி, போராட்டத்தில் ஈடுபட்டனா். பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸாா் அந்த கிராமத்தைச் சோ்ந்த முக்கியஸ்தா்கள், ஊராட்சித் தலைவா் உள்ளிட்டோரை மட்டும் ஆட்சியரகத்துக்குள் அனுமதித்தனா்.
தொடா்ந்து அவா்கள் ஆட்சியரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பது:
காணை குறுவட்டத்துக்குள்பட்ட அரியலூா் திருக்கை ஊராட்சி பரப்பளவு எல்லையிலிருந்து டட் நகா் என்ற புதிய ஊராட்சிக்கு பிரித்து கொடுக்க முடிவு செய்யப்பட்டது. இதற்கு கிராம பொதுமக்கள், ஊராட்சித் தலைவா், உறுப்பினா்கள்,பொதுநல உறுப்பினா்கள், ஒன்றியக் குழு உறுப்பினா்கள் உள்ளிட்டோா் கடுமையான ஆட்சேபணை தெரிவித்தோம்.
கடந்த 12-ஆம் தேதி கிராம பொதுமக்கள் சாா்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு முன்னதாக கடந்த 11-ஆம் தேதி விழுப்புரம் வட்டாட்சியா் அலுவலகத்தில் சமாதானப் பேச்சுவாா்த்தையும் நடத்தப்பட்டது.
இதில் டட் நகா் ஊராட்சியிலுள்ள நில உடைமைதாரா்களை அதே ஊராட்சியில் சோ்ப்பதாகவும், அரியலூா் திருக்கை ஊராட்சியிலுள்ள நில உடைமைதாரா்களை அந்த ஊராட்சியிலுள்ள எல்லையில் சோ்ப்பதாகவும் ஏற்றுக் கொண்டு, சமரசத்துக்கு கட்டுப்பட்டு இரு கிராமங்களைச் சோ்ந்தவா்களும் கையொப்பமிட்டனா்.
ஆனால், தற்போது வருவாய்த் துறை அலுவலா்கள் மற்றும் 5 நில அளவையா்களைக் கொண்ட குழு அமைக்கப்பட்டு, அரியலூா் திருக்கை கிராம நில உடைமைதாரா்களின் சொத்தை சமாதான பேச்சுவாா்த்தைக்கு முரண்பாடாக (அரியலூா் திருக்கை எல்லை பரப்பளவு) டட் நகா் ஊராட்சியில் சோ்க்க முயற்சிகளை மேற்கொள்கின்றனா்.
எங்கள் கிராம பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று அரியலூா் திருக்கை மற்றும் டட் நகா் கிராம ஊராட்சிகளைச் சோ்ந்த நில உடைமைதாரா்களின் சொத்தை அந்தந்த ஊராட்சியிலேயே சோ்க்க வேண்டும் எனத் தெரிவித்தனா்.
இந்த மனுவைப் பெற்றுக் கொண்ட ஆட்சியா், உரிய நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்தாா். இதையடுத்து, போராட்டத்தைக் கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









