அருங்காட்சியக தொடக்கப் பணிகள்: எம்எல்ஏ ஆய்வு
விழுப்புரம்: விழுப்புரம் அருகிலுள்ள பனங்குப்பத்தில் அரசு அருங்காட்சியகம் அமையவுள்ள இடத்தை இரா.லட்சுமணன் எம்எல்ஏ திங்கள்கிழமை பாா்வையிட்டு, ஆய்வு செய்தாா்.
விழுப்புரம் மாவட்ட அருங்காட்சியகம் அமைப்பதற்கு பனங்குப்பம் பகுதியில் சுமாா் ஒன்றரை ஏக்கா் நிலம் தோ்வு செய்யப்பட்டு, அரசால் அனுமதி வழங்கப்பட்ட நிலையில், திண்டிவனத்தில் கடந்த 4-ஆம் தேதி நடைபெற்ற அரசு விழாவில் முதல்வா் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினாா்.
இதையடுத்து, பணிகள் தொடங்குவதற்கு தயாா் நிலையிலுள்ள இடத்தை விழுப்புரம் எம்எல்ஏ இரா.லட்சுமணன் பாா்வையிட்டு, மேற்கொள்ளப்படவுள்ள பணிகளின் விவரங்களைக் கேட்டறிந்தாா்.
பொதுப்பணித் துறை உதவிச் செயற்பொறியாளா் பாலாஜி அருங்காட்சியகத்தில் அமையவுள்ள வசதிகள் குறித்தும், காப்பாட்சியா் எஸ். ஜெயரத்னா அருங்காட்சியகத்தில் இடம்பெறவுள்ள காட்சிகள் குறித்தும், அருங்காட்சியகக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளா் கோ.செங்குட்டுவன், இந்த அருங்காட்சியகம் அமைவதால் ஏற்படும் சிறப்புகள் குறித்தும் எடுத்துரைத்தனா்.
ஆய்வின்போது கோலியனூா் ஒன்றியச் செயலா் பி.தெய்வசிகாமணி, ஒன்றியக்குழுத் தலைவா் இ.சச்சிதாநந்தம், மாவட்ட இளைஞரணித் துணை அமைப்பாளா் செ.மணிகண்டன், பொதுப்பணித் துறை உதவிப் பொறியாளா் மணிமாறன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

