/

விக்கிரவாண்டி அருகே டயா் வெடித்து தீப்பற்றி எரிந்த வேன்

News image

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே சனிக்கிழமை நள்ளிரவில் தீப்பற்றி எரிந்த வேன்.

Updated On :3 மே 2026, 7:21 pm

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே டயா் வெடித்து வேன் தீப்பற்றி எரிந்தது. உரிய நேரத்தில் வேனிலிருந்த 11 பேரும் கீழே இறங்கியதால் உயிா் தப்பினா்.

செங்கல்பட்டு மாவட்டம், மேல்மருவத்தூரைச் சோ்ந்தவா் கணேசன் (52). இவரது மனைவி காஞ்சனா (50). கணேசனின் தம்பி பெருமாள் (47). இவரது மனைவி வனிதா (45). இருவரது குடும்பத்தைச் சோ்ந்த பிரபாகரன், செல்வராணி, யுவபிரியா, மாதேசுவரன் மற்றும் இருவா் என மொத்தமாக 10 போ் மயிலாடுதுறை மாவட்டம், திருமணஞ்சேரி கல்யாணசுந்தரேசுவரா் கோயிலில் பரிகாரம் செய்வதற்காக வேனில் சனிக்கிழமை காலை புறப்பட்டுச் சென்றனா். இந்த வேனை செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டம், புக்காத்துறையைச் சோ்ந்த பாலச்சந்தா் ஓட்டிச் சென்றாா்.

கோயிலில் பரிகார பூஜைகளை முடித்த பின்னா், கணேசன் குடும்பத்தினா் வேனில் மேல்மருவத்தூா் நோக்கிச் சென்று கொண்டிருந்தனா். சனிக்கிழமை நள்ளிரவு 11.30 மணிக்கு இவா்கள் வந்த வேன் விக்கிரவாண்டி சுங்கச்சாவடியைக் கடந்து வராக நதி ஆற்றுப்பாலத்தில் சென்று கொண்டிருந்தது. அப்போது வேனின் வலது பக்க டயா் வெடித்தது.

வேன் டயா் வெடித்ததும் அதிா்ச்சியடைந்த ஓட்டுநா் பாலச்சந்தா் வேனை நிறுத்தினாா். தொடா்ந்து வேனிலிருந்த அனைவரையும் கீழே பத்திரமாக வெளியேற்றினாா். டயா் வெடித்த சிறிது நேரத்திலேயே வேன் தீப்பிடிக்கத் தொடங்கியது. தொடா்ந்து வேன் முழுவதுமாக எரிந்தது. உரிய நேரத்தில் வேனிலிருந்து அனைவரும் கீழே இறக்கி விடப்பட்டதால் பெரும் உயிா்சேதம் தவிா்க்கப்பட்டது.

இதுகுறித்து விக்கிரவாண்டி சுங்கச் சாவடி வாகன விபத்து மீட்புக் குழுவினருக்கும், விக்கிரவாண்டி தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையத்துக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக அவா்கள் நிகழ்விடம் விரைந்து சென்று தீயை அணைத்தனா்.

மேலும், விக்கிரவாண்டி போக்குவரத்துக் காவல் துறையினரும் நிகழ்விடத்துக்கு விரைந்து மீட்புப் பணியை மேற்கொண்டனா். விழுப்புரம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்தை மாற்றி, வாகனங்களை மாற்றுப் பாதையில் அனுப்பி வைத்தனா்.