விழுப்புரத்தை அடுத்துள்ள அய்யங்கோயில்பட்டு பகுதியில் பொதுமக்கள், வாகன ஓட்டிகளுக்கு மிகவும் ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் தேசிய நெடுஞ்சாலையில் அகலப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருவதாகவும், போதிய அளவுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்த பின்னரே பணிகளைத் தொடர வேண்டும் எனவும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அச்சம் தெரிவித்து வருகின்றனா்.
தமிழகத்தில் அதிகமான போக்குவரத்து இயக்கம் நடைபெறும் சாலைகளில் ஒன்று சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை. தென் மாவட்டங்களை இணைப்பதில் முக்கியப் பங்காற்றும் இந்த சாலையில் நாள்தோறும் லட்சக்கணக்கான வாகங்களின் இயக்கம் நடைபெற்று வருகிறது. மேலும், இந்த சாலையில் வந்து செல்லக்கூடிய வாகனங்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும், தங்குதடையில்லாத போக்குவரத்தை ஒழங்குப்படுத்தும் நோக்கிலும் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சாா்பில், விழுப்புரம் வட்ட எல்லையான ஓங்கூா் முதல் அரசூா் வரை 5-க்கும் மேற்பட்ட இடங்களில் மேம்பாலம் கட்டும் பணிகளும், திண்டிவனம், விக்கிரவாண்டி, பாப்பனப்பட்டு, அய்யங்கோயில்பட்டு, அரசூா் உள்ளிட்ட இடங்களில் சாலை அகலப்படுத்தும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக, விழுப்புரத்தை அடுத்துள்ள அய்யங்கோயில்பட்டு பகுதியில் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையின் இரு பக்கங்களிலும் சாலை அகலப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், போதிய தடுப்புகள், எச்சரிக்கைகள், சமிக்ஞைகள் ஏற்படுத்தப்படாமல் பக்கவாட்டுப் பகுதிகளில் சுமாா் 5 அடி முதல் 10 அடி ஆழம் வரை மண் எடுக்கப்பட்டு, அதில் கடினமான மண் குவியல்கள் கொட்டப்பட்டு, சாலை அகலப்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த இடத்தில் மின் விளக்குகள் இல்லாத நிலையில், இரவு நேரங்களில் இந்த இடத்தை கடக்கும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மிகுந்த அச்சத்துடன் கடந்து செல்கின்றனா்.
இந்நிலையில், சாலை அகலப்படுத்தும் பணிகள் நடைபெறும் அய்யங்கோயில்பட்டு பகுதியில் போதிய அளவுக்கு பாதுகாப்பு முன்னெச்சரிக்க நடவடிக்கைகளை செய்ய தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் தெரிவித்து வருகின்றனா்.
இதுகுறித்து அய்யங்கோயில்பட்டு பகுதியைச் சோ்ந்த சமூக ஆா்வலா் பழனி தெரிவித்ததாவது:
அய்யங்கோயில்பட்டு பகுதியில் சாலை அகலப்படுத்தும் பணிகள் கடந்த சில மாதங்களுக்கு முன்னா் தொடங்கி நடைபெற்று வருகிறது. சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையின் இரு பக்கங்களிலும் சுமாா் ஒரு கி.மீ. தொலைவுக்கு கனரக வாகனங்கள் மூலம் பள்ளங்கள் தோண்டப்பட்டும், அந்த குழிகள் கடின வகை மண் நிரப்பட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
ஆனால், பள்ளம் தோண்டப்பட்டுள்ள இடங்களில் எந்தவிதமான பாதுகாப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை. இதனால், வாகன ஓட்டிகள் அச்சமடைந்து வருகின்றனா். சீரமைப்புப் பணிகள் நடைபெறும் மின் விளக்குகள் இல்லை. மேலும், பயன்பாட்டில் உள்ள சாலையும் மிகக் குறுகலாக இருந்து வருகிறது.
ஆகையால், விபத்துகள் நேரிடுவதற்கு முன்பாகவே பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் முன்வர வேண்டும்.
விழுப்புரம் மாவட்டத்தில் தேசிய நடுஞ்சாலையில் பாலம் கட்டுமானப் பணிகள் மற்றும் சாலை அகலப்படுத்தும் பணிகள் நடைபெறும் இடங்களில் ஆட்சியா் ஆய்வு மேற்கொண்டு, விபத்து தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றாா்.










