மத அரசியல்-29: சமணம்

மத அரசியல்-29: சமணம்

சமணம் (Jainism)

சமணசமயத் தோற்றம்

சமணர் (ஸ்ரமணர்) என்றால் துறவிகள் என்பது பொருள். துறவை வற்புறுத்திக் கூறி, துறவு பூண்டோரே வீடுபெறுவர் என்று இந்த மதம் சாற்றுகிறது. எனவே, துறவு எனப் பொருள்படும் சமணம் என்னும் பெயர் இந்த மதத்திற்குச் சிறப்புப் பெயராக வழங்கப்படுகிறது. பலன்களையும் கர்மங்களையும் ஜயித்தவர்(வென்றவர்) ஆகலான் தீர்த்தங்கர்ருக்கு ஜினர் என்னும் பெயர் உண்டு. ஜினரைக் கடவுளாக உடைய மதம் ஜைன மதம் எனப்பட்டது. சமண சமயக் கடவுளுக்கு அருகன் என்னும் பெயரும் உண்டு. ஆகவே, அருகனை வணங்குவோர் ஆருகதர் என்றும் இந்த மதத்திற்கு ஆருகதமதம் என்றும் பெயர் கூறப்படுகிறது.

சமணசமயத்திற்கு ஜைன மதம், ஆருகத மதம், நிகண்ட மதம், அநேகாந்தவாத மதம், ஸியாத்வாத மதம் என்னும் பெயர்களும் உள்ளன.

ஜினர்=வென்றவர் (ஐம்புலன்களையும், இருவினைகளையும் ஜெயித்தவர்) = ஜைனமதம்

அருகர்=அருகபதவி (இருவினைகளை முற்றுமாகப்போக்கி, வீடுபேற்றின் பேரின்பநிலையை அடைந்தவர்) = அருகமதம்

நிக்கந்தர்=பற்றற்றவர் = நிக்கண்ட மதம்

பிண்டியர்=பிண்டி (அசோக) மரத்தைப் போற்றி வழிபடுபவர் = பிண்டியர் மதம்

சமணக் கடவுள் பற்றற்றவர் ஆதலின் நிர்க்கந்தர் அல்லது நிகண்டர் எனப்பட்டார். அதுபற்றிச் சமண சமயம் நிகண்டமதம் எனப் பெயர்பெற்றது. மதங்கள் ஏகாந்தவாதம், அநேகாந்தவாதம் என இருவகை. சமணம் ஒழிந்த ஏனைய மதங்கள் எல்லாம் ஏகாந்தவாத மதங்கள். சமணம் ஒன்றே அநேகாந்தவாதத்தைக் கூறுவது. ஆகவே, இந்த மதத்திற்கு அநேகாந்தவாத மதம் என்று பெயர் உண்டாயிற்று. ஸியாத்வாதம் என்றாலும் அநேகாந்தவாதம் என்றாலும் ஒன்றே. அசோக (பிண்டி) மரத்தைப் போற்றுவது சமணர் வழக்கமாதலின் சமணருக்குப் பிண்டியர் என்னும் பெயர் கூறப்படுகிறது.

சமணசமயக் கொள்கைகளை அவ்வப்போது உலகத்தில் பரவச் செய்வதின் பொருட்டுத் தீர்த்தங்கரர்கள் தோன்றுகின்றனர் என்பது சமண சமயக் கொள்கை. ‘தீர்த்தங்கரர்’என்பதற்குத் ‘தம் ஆன்மாவைப் பிறவிக்கடலிலிருந்து கரையேற்றிக் கொண்டவர்’ என்பது பொருள். இதுவரை 24 தீர்த்தங்கரர்கள் தோன்றியுள்ளார்கள் என்பதும் இனியும் 24 தீர்த்தங்கரர்கள் தோன்றுவர் என்பதும் இச்சமயக் கொள்கையாகும்.

வர்த்தமான மகாவீரர்

தொன்மையும் நீண்ட வரலாறும் கொண்ட சமண சமயம் இருபத்தி நான்காம் தீர்த்தங்கரராகிய வர்த்தமான மகாவீரரால் தோற்றுவிக்கப்பட்டது என்று கூறுவர். இது வரலாற்றுக்கு முரண்பட்டதாகும். அத்துடன் இந்து சமயத்தின் கிளை என்று கூறுவதும் தவறானது. சமண சமயத்தின் தோற்றம் முதல் தீர்த்தங்கரராகிய விருஷப தேவரால் தோற்றுவிக்கப்பட்டது என்பது சமணர் கொள்கை. விருஷபதேவரை ஆதிபகவன் என்றும் ஆதிநாதர் என்றும் வழங்கும் வழக்கமும் சமணரிடையே உண்டு. விருஷபதேவர் வரலாற்றுக்கு முற்பட்டவர் என்பதால் இக்கருத்தை வரலாற்றாசிரியர் ஏற்பதில்லை. ஆயினும் இருபத்தி மூன்றாம் தீர்த்தங்கரராகிய பார்சுவநாதர் கி.மு. எட்டாம் நூற்றாண்டைச் சார்ந்தவர் என்பதாலும், அவர்க்கும் முன்னவரான இருபத்தி இரண்டாம் தீர்த்தங்கரராகிய நேமிநாதருக்கும் வரலாற்றுச் சான்றுகள் கிடைப்பதாலும் வர்த்தமான மகாவீரர் சமண மதத்தைத் தோற்றுவித்தவர் என்ற கருத்து தவறானது என்பதை உறுதிபடக் கூறலாம். காலத்திற்கு ஏற்பச் சில சீர்திருத்தங்களை மகாவீரர் செய்தாரே ஒழிய, சமண சமயத்தைத் தோற்றுவித்தவர் அல்லர்.

மகாவீரர் காலத்தில்தான் கௌதம புத்தரும் வாழ்ந்தார். இவர்களின் தோற்றமும் எழுச்சியும் இந்திய வரலாற்றிலேயே ஒரு குறிப்பிடத்தக்க நிகழ்ச்சி எனக் கூறலாம். அந்தக் காலக் கட்டத்தில் தான் கொல்லாமை அறமும் மறுபிறப்பு எடுத்தது.

இதுவரை தோன்றியுள்ள இருபத்துநான்கு தீர்த்தங்கரர்களின் பெயர் வருமாறு:

 1. விருஷப தேவர் (ஆதி பகவன்)

13. விமல நாதர்
2. அஜிதநாதர்14. அநந்த நாதர் (அநந்தஜித் பட்டாரகர்)
3. சம்பவ நாதர்15. தருமநாதர்
4. அபி நந்தனர்16. சாந்தி நாதர்
5. சுமதி நாதர்17. குந்துநாதர்(குந்து பட்டாரகர்)
6. பதும நாபர்18. அரநாதர்
7. சுபார்சவ நாதர்19. மல்லிநாதர்
8. சந்திரப் பிரபர்20. முனிசு வர்த்தர்
9. புஷ்ப தந்தர்(சுவிதி நாதர்)21. நமிநாதர்(நமிபட்டாரகர்)
10. சீதள நாதர்22. நேமிநாதர்(அரிஷ்ட நேமி)
11. சீறீயாம்ச நாதர்23. பார்சுவ நாதர்
12. வாசு பூஜ்யர்24. வர்த்தமான மகாவீரர்

தீர்த்தங்கரர்கள் அருகக் கடவுளைப் போன்றே தெய்வமாகத் தொழப்படுகின்றனர்.   சமண சமயக் கொள்கைகளை, விருஷப தேவர் (ஆதி பகவன்) முதல் முதல் உலகத்திலே பரப்பினார் என்றும், அவருக்குப் பின்னர் வந்த தீர்த்தங்கரர்களும் இந்த மதத்தைப் போதித்தார்கள் என்றும் சமணர் கூறுவர். ஆனால், வரலாற்றாசிரியர்கள் இதனை ஒப்புக்கொள்வதில்லை. இருபத்து மூன்றாவது தீர்த்தங்கரராகிய பார்சவநாதர் சமண மதத்தை உண்டாக்கினார் என்றும் அவருக்குப் பின் வந்த வர்த்தமான மகாவீரர் இந்த மதத்தைச் சீர்திருத்தியமைத்தார் என்றும் வரலாற்றாசிரியர்கள் கருதுகிறார்கள். இவ்விரு தீர்த்தங்கரருக்கு முன்பிருந்த ஏனைய இருபத்திரண்டு தீர்த்தங்கரரும் கற்பனைப் பெரியார் என்று இவர்கள் கூறுகின்றனர். இவர்கள் இவ்வாறு கூறுவதற்கு இரண்டு காரணங்களைக் காட்டுகின்றனர். அக்காரணங்களாவன;

  • முதல் இருபத்திரண்டு தீர்த்தங்கரர்கள் இயற்கைக்கு மாறுபட்டு, அதிக உயரமும் அதற்கேற்ற பருமனும் வாய்த்திருந்தனர் என்று கூறப்படுவது ஒன்று.
  • இவர்கள் இயற்கைக்கு மாறுபட்டுப் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் உயிர் வாழ்ந்திருந்தனர் எனக் கூறப்படுவது மற்றொன்று.

தீர்த்தங்கரர்களின் உயரமும் ஆயுளும் 

பெயர்உயரம்ஆயுள்
1. விருஷபர்500-வில்84 லட்ச பூர்வ ஆண்டு
2. அஜிதநாதர்450-வில்71 "
3. சம்பவநாதர்400-வில்60 "
4. அபிநந்தனர்350-வில்50 "
5. சுமதிநாதர்300-வில்40 லட்ச பூர்வ ஆண்டு
6. பதுமநாபர்250-வில்30 "
7. சுபார்சவநாதர்200-வில்20 "
8. சந்திரப்பிரபர்150-வில்10 "
9. புஷ்பதந்தர்100-வில்2 லட்ச பூர்வ ஆண்டு
10. சீதளநாதர்90-வில்1  "
11. சிறீயாம்சநாதர்80-வில்80 லட்சம் ஆண்டு
12. வாசு பூஜ்யர்70-வில்72 "
13. விமலநாதர்60-வில்60 "
14. அருந்தநாதர்50-வில்30 "
15. தருமநாதர்45-வில்10 "
16. சாந்திநாதர்40-வில்1  "
17. குந்துநாதர்35-வில்95 ஆயிரம் ஆண்டு
18. அரநாதர்30-வில்84 "
19. மல்லிநாதர்25-வில்55 "
20. முனிசுவர்த்தர்20-வில்30 "
21. நமிநாதர்15-வில்10 "
22. நேமிநாதர்10-வில்1 "
23. பார்சுவநாதர்9-முழம்100 ஆண்டு
24. மகாவீரர்7-முழம்72 ஆண்டு

இவ்வாறு ஆயிரக் கணக்கான ஆண்டுகள் உயிர் வாழ்ந்திருந்தவராகக் கூறப்படுகிற முதல் இருபத்திரண்டு தீர்த்தங்கரர்களை கற்பனைப் பெரியார் என்று ஒதுக்கிவிட்டு முறையே 100 ஆண்டும் 72 ஆண்டும் உயிர் வாழ்ந்தவராகக் கூறப்படுகிற கடைசி இரண்டு தீர்த்தங்கரராகிய பார்சுவநாதரையும், மகாவீரரையும் உலகத்தில் உயிர்வாழ்ந்திருந்த உண்மைப் பெரியார் என்றும் கொண்டு, இவர்கள் காலத்தில்தான் சமணமதம் தோன்றியிருக்க வேண்டும் என்று வரலாற்றாசிரியர் கருதுகிறார்கள்.

ஆராய்ந்து பார்த்தால் தீர்த்தங்கரர் அனைவரும் உண்மையில் உயிர் வாழ்ந்திருந்த பெரியார் என்பதும் கற்பனைப் பெரியார் அல்லர் என்பதும் புலப்படும். பண்டைக் காலத்திலிருந்த சமயப் பெரியார்களைப் பற்றிப் பிற்காலத்தவர், மக்கள் இயற்கைக்கு மேற்பட்ட இயல்புகளைக் கற்பித்துக் கதை எழுதுவது வழக்கம். இது எல்லா மதங்களுக்கும் இயல்பு. தம்முடைய மதப் பெரியார்களின் பெருமை, ஆற்றல், சிறப்பு, தெய்விகத் தன்மை முதலியவற்றை அதிகப்படுத்த வேண்டும் என்னும் சமய ஆர்வத்தினால் ஒவ்வொரு சமயத்தாரும் தத்தம் சமயப் பெரியாரைப் பற்றிப் பலவித செய்திகளைக் கற்பித்து விடுகிறார்கள். இயற்கைக்கு மாறுபட்ட இக் கற்பனைகளைச் ‘சமயப்பற்று’ என ஒதுக்கிவிட்டுப் பார்த்தால், அவர்கள் உண்மையில் உலகத்தில் வாழ்ந்திருந்தவர் என்பது புலனாகும். அதுபோன்று தீர்த்தங்கரரின் மிகப் பெரிய உருவத்தையும் நீண்ட வாழ்க்கையையும் சமணரின் ‘சமயக் கொள்கை’ என்று ஒதுக்கிவிடுவோமாயின், தீர்த்தங்கரர் அனைவரும் உண்மைப் பெரியார் என்பது புலப்படும்.

சமணர்கள் தமது தீர்த்தங்கரருக்கு ஏன் பருத்த உயர்ந்த உடலையும் நீண்ட ஆயுளையும் கற்பித்தார்கள்?

உயிர் உடம்பு முழுவதும் பரவி நிற்கிறது என்பதும், உடம்பின் உருவத்திற்கு ஏற்றபடி உயிரானது சிறிதும் பெரிதுமாக அமையும் என்பதும் சமண சமயக்கொள்கை. எறும்பின் மிகச்சிறிய உடலில் பரந்து நிற்கும் உயிர் அதன் உடலுக்குத் தக்கபடி சிறியதாகவும், மிகப்பெரிய யானையின் உடம்பில் பரந்து நிற்கும் உயிர் அதன் பெரிய உடம்புக்குத் தக்கபடி மிகப் பெரியதாகவும் அமைந்து நிற்கும் என்பது ஆருகதமதக் கொள்கை. இக்கருத்துப் பற்றியே ‘‘பெரியதன் ஆவி பெரிது’என்னும் பழமொழியும் சமணரால் வழங்கப்படுவதாயிற்று. 

அரிதவித் தாசின் றுணர்ந்தவன் பாதம்
விரிகடல் சூழ்ந்த வியண்கண்மா ஞாலத்
துரியதனிற் கண்டுணர்ந்தார் ஓக்கமே போலப்
பெரியதன் ஆவி பெரிது

- என்பது பழமொழி நானூறு.

இச்சமயக் கொள்கையை அடிப்படையாகக் கொண்டு ஆருகதர் தமது தீர்த்தங்கரருக்கு மிகப் பெரிய உருவத்தைக் கற்பித்தார்கள் போலும், மிகப் பெரிய உருவத்தைக் கற்பித்ததற் கேற்ப மிக நீண்ட ஆயுளையும் கற்பித்தார்கள் போலும். இவ்விரண்டு கற்பனைகளையும் தள்ளிவிடுவோமாயின், தீர்த்தங்கரர் உண்மையில் இருந்த பெரியார் என்பது விளங்கும்.

தீர்த்தங்கரர் அனைவரும் உண்மைப் பெரியார் என்றே கொள்வோம். ஆனால், இவர்கள் அனைவரும் சரித்திர காலத்துக்கு உட்பட்டவர் அல்லர். முதல் பத்தொன்பது தீர்த்தங்கரர்கள் சரித்திரகாலத்துக்கு முற்பட்டவராகக் காணப்படுகின்றனர். கடைசி ஐந்து தீர்த்தங்கரர்களாகிய முனிசு வர்த்தர், நமிநாதர், நேமிநாதர் பார்சுவநாதர், மகாவீரர் என்பவர்கள் சரித்திர காலத்துக்குட்பட்டவராவர். 

இராமாயணக் கதையையும் பாரதக் கதையையும் சரித்திரக் கதைகளாக ஒப்புக்கொண்டு வரலாற்றாசிரியர் இந்திய சரித்திரத்தை எழுதி வருகிறார்கள். இந்திய சரித்திரத்தின் தொடக்கத்தில் இராமாயண, பாரதக் கதைகள் கூறப்படுகின்றன. இக்கதைகள் சைவ, வைணவர் உள்ளதுபோலவே சமணர்களுக்கும் உள்ளன. இராமாயண காலத்தில் இருந்த 20 ஆவது தீர்த்தங்கராகிய முனிசுவர்த் தரும், அவருக்குப் பின் இருந்த நமிநாதர் என்னும் 21 ஆவது தீர்த்தங்கரரும், அவருக்குப் பிறகு பாண்டவர் கண்ணபிரான் காலத்தில் இருந்தவராகிய 22-ஆவது தீர்த்தங்கரராகிய நேமிநாதரும்2, அவருக்குப் பிறகு இருந்த பார்சுவநாத தீர்த்தங்கரரும். அவருக்குப் பிறகு புத்த பகவான் காலத்தில் இருந்த 24 ஆவது தீர்த்தங்கரராகிய மகாவீரரும் சரித்திர காலத்தில் இருந்தவர் ஆவர்.

இருபத்து மூன்றாவது தீர்த்தங்கரராகிய பார்சுவநாதர் கி.மு. எட்டாம் நூற்றாண்டில் இருந்தவர். அதாவது கி.மு. 817 முதல் கி.பி. 717 வரையில் இருந்தவர். இவருக்குப்பின்னர் 250 ஆண்டுகளுக்குப் பிறகு வர்த்தமான மகாவீரர் தோன்றி 72 ஆண்டுகள் உயிர்வாழ்ந்திருந்தார். இவர் கி.மு. 599 முதல் கி.பி. 527 வரையில் இருந்தவர். வர்த்தமான மகாவீரர் காலத்திலே, பௌத்த மதத்தை உண்டாக்கிய கௌதமபுத்தரும், ஆசீவகமதத்தை உண்டாக்கிய மற்கலியும் இருந்தார்கள். இவர்களில் மகாவீரர் வயதில் மூத்தவர். மற்கலி, மகாவீரருடன் ஆறு ஆண்டு ஒருங்கிந்தார். பிறகு மகாவீரருக்கு மாறுபட்டு ஆசீவகமதம் என்னும் புதிய மதத்தையுண்டாக்கினார். இதனால், பௌத்த மதமும் ஆசிவகமதமும் மகாவீரர் காலத்தில் தோன்றிய மதங்கள் என்பதும் இவ்விரு மதங்களுக்கு முற்பட்டது சமணமதம் என்பதும் விளங்குகின்றன.

தொடரும்...

C.P.சரவணன், வழக்கறிஞர் 9840052475

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com