பூமிகாரகரின்  சுப பலம் 

எனக்கு 52 வயதாகிறது.  எனக்கு சொந்தமான ஒரு கடையை வாடகைக்கு எடுத்தவர்  வாடகை தராமல்  என் மீது வழக்கு போட்டு இழுத்தடிக்கிறார். நான்கு வருடங்களாக வழக்கு நடந்து கொண்டிருக்கிறது.


எனக்கு 52 வயதாகிறது.  எனக்கு சொந்தமான ஒரு கடையை வாடகைக்கு எடுத்தவர்  வாடகை தராமல்  என் மீது வழக்கு போட்டு இழுத்தடிக்கிறார். நான்கு வருடங்களாக வழக்கு நடந்து கொண்டிருக்கிறது. என் சொந்த ஊரில்  உள்ள என் வீட்டில் குடியிருந்த சகோதரியும்  வீட்டை காலி செய்ய மறுப்பதால், அவர் மீதும் வழக்கு தொடர்ந்துள்ளேன்.  எனது கடையும்,  வீடும் எப்பொழுது என் கைக்கு வரும்? பரிகாரம் ஏதும் செய்ய வேண்டுமா? 

-வாசகர், விருதுநகர்.

உங்களுக்கு ரிஷப லக்னம்,  சித்திரை நட்சத்திரம், துலாம் ராசி. லக்னம்,  ஆறாமதிபதியான சுக்கிர பகவான் லக்னத்தில் சந்திர பகவானின் சாரத்தில்  (ரோகிணி நட்சத்திரம்) ஆட்சி பெற்றமர்ந்து நவாம்சத்தில்  மிதுன ராசியை அடைகிறார். 

இதனால் பஞ்ச மஹா புருஷ யோகங்களில் ஒன்றான மாளவிகா யோகத்தைப் பெறுகிறார். குடும்பாதிபதி மற்றும் பூர்வ புண்ணியாதிபதியான புத பகவான் லாபஸ்தானத்தில் சுய சாரத்தில்  (ரேவதி நட்சத்திரம்) நீச்சபங்க ராஜயோகம் பெற்றமர்ந்து நவாம்சத்தில் மகர ராசியை அடைகிறார். 

தர்மகர்மாதிபதியான சனி பகவான் லாபஸ்தானத்தில் சுய சாரத்தில்  (உத்திரட்டாதி நட்சத்திரம்)  அமர்ந்து நவாம்சத்தில் உச்சமடைகிறார். 

சுக ஸ்தானமான நான்காமதிபதி சூரிய பகவான் அயன ஸ்தானத்தில் கேது பகவானின் சாரத்தில்  (அசுவினி நட்சத்திரம்) உச்சம் பெற்றமர்ந்து நவாம்சத்தில் மிதுன ராசியை அடைகிறார்.
களத்திர நட்பு ஸ்தானமான ஏழாம் வீட்டிற்கும்,  அயன ஸ்தானமான பன்னிரண்டாம் வீட்டிற்கும் அதிபதியான செவ்வாய் பகவான் பூர்வ புண்ணிய ஸ்தானமான ஐந்தாம் வீட்டில் சுய சாரத்தில்  (சித்திரை நட்சத்திரம்) வர்கோத்தமத்தில் அமர்ந்திருக்கிறார்.  அஷ்டம ஸ்தானமான எட்டாம் வீட்டிற்கும்,  லாப ஸ்தானமான பதினொன்றாம் வீட்டிற்கும் அதிபதியான குரு பகவான் தைரிய ஸ்தானமான மூன்றாம் வீட்டில் சுய சாரத்தில்  (புனர்பூசம் நட்சத்திரம்) உச்சம் பெற்று  வர்கோத்தமத்திலும்  அமர்ந்து இருக்கிறார். 
குரு பகவானின் ஐந்தாம் பார்வை களத்திர நட்பு ஸ்தானமான ஏழாம் வீட்டின் மீதும், ஏழாம் பார்வை பாக்கிய ஸ்தானமான ஒன்பதாம் வீட்டின் மீதும், ஒன்பதாம் பார்வை லாப ஸ்தானமான பதினொன்றாம் வீட்டின் மீதும் அங்கமர்ந்திருக்கும் புதன், சனி பகவான்களின் மீதும் படிகிறது.
நீச்சனேறிய ராசிநாதன் ஆட்சி உச்சம் பெறுகையில் நீச்சபங்க ராஜயோகமுண்டாகும் என்கிற விதியின் அடிப்படையில் புத பகவானுக்கு நீச்சபங்க ராஜயோகம் உண்டாகிறது. 
கேது பகவான் ஆறாம் வீட்டில் ராகு பகவானின் சாரத்தில்  (சுவாதி நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் கும்ப ராசியை அடைகிறார். ராகு பகவான்  பன்னிரண்டாம்  வீட்டில் சுக்கிர பகவானின் சாரத்தில்  (பரணி நட்சத்திரம்)  அமர்ந்து  நவாம்சத்தில் சிம்மராசியை அடைகிறார். 
உங்களுக்கு இரண்டு கிரகங்கள் உச்சம், லக்னாதிபதி ஆட்சி, பூர்வ புண்ணியாதிபதி நீச்சபங்க ராஜயோகம், கஜகேசரி யோகம்,  ஹம்ச யோகம்,  பெளர்ணமி யோகம் ஆகிய சிறப்பான யோகங்கள் பெற்ற ஜாதகமாகும். 
சனி மஹா தசையில் ராகு பகவானின் புக்தியில் மேற்கூறிய சிரமங்கள் ஏற்பட்டாலும், அவைகள் அடுத்த ஆண்டு இறுதிக்குள் உங்களுக்கு சாதகமாக முடிந்துவிடும். 
பூமி காரகரும் சுய சாரத்தில் இருப்பது சிறப்பு. அதனால் பெரிதாகக்  கவலைப்பட வேண்டாம். பிரதி செவ்வாய்க்கிழமைகளில் முருகப் பெருமானை வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com