ராகு - கேது பெயர்ச்சி 2025: மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு இந்த ராகு - கேது பெயர்ச்சி எப்படி இருக்கப்போகிறது?
ராகு - கேது பெயர்ச்சி 2025: மகரம்
Published on
Updated on
2 min read

மகரம் (உத்திராடம் 2-ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2-ம் பாதம் முடிய)

எதிலும் போராடி வெற்றிபெறக்கூடிய ஆற்றலும் தன்னம்பிக்கையும், தைரியமும் கொண்ட மகர ராசி அன்பர்களே!!

கிரகநிலை

26-04-2025 அன்று ராகு பகவான் தைரிய வீரிய ஸ்தானத்தில் இருந்து தன வாக்கு குடும்ப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

26-04-2025 அன்று கேது பகவான் பாக்கிய ஸ்தானத்தில் இருந்து அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

11-05-2025 அன்று குரு பகவான் பஞ்சம ஸ்தானத்தில் இருந்து ரண ருண ரோக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

இந்த ராகு கேது பெயர்ச்சியால் அதீதமாக எடுக்கும் முயற்சிகளில் வெற்றியும், குடும்பத்தில் முன்னேற்றமும் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் ஏற்படலாம். திருமன சுபகாரியங்களில் சிறு சிறு தடைகளுக்கு பின் வெற்றிகிட்டும். பொருளாதார நிலையும் தேவைக்கேற்றபடியிருப்பதால் குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். பணம் கொடுக்கல், வாங்கல் போன்றவற்றில் கவனமுடன் இருப்பது நல்லது.

தேவையற்ற அலைச்சல்கள் அதிகரிக்கும். கணவன் - மனைவியிடையே தெவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றும். பேச்சில் நிதானத்தைக் கடைபிடிப்பது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்கள் சற்று போட்டிகளை எதிர்கொண்டே முன்னேற்றம் அடையமுடியும். எந்தவொரு விஷயத்திலும் சிந்தித்துச் செயல்படுவது நல்லது.

பொருளாதார நிலை

குடும்ப சூழ்நிலை ஓரளவுக்கு மகிழ்ச்சிகரமாக இருக்கும். கணவன் - மனைவியிடையே சிறு சிறு கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. அசையும், அசையா சொத்துக்களால் வீண் விரயங்களை சந்திப்பீர்கள். உறவினர்களை அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. பண வரவுகளில் சுமாரான நிலையே இருக்கும் என்பதால் ஆடம்பரச் செலவுகளை குறைக்கவும்.

கொடுக்கல்-வாங்கல்

பொருளாதார தேவைகேற்றபடி இருந்தாலும் கொடுக்கல் - வாங்கலில் பெரிய தொகைகளை பிறரை நம்பி கடனாகக் கொடுப்பதை தவிர்க்கவும். பண விஷயத்தில் பிறருக்கு வாக்குறுதி கொடுப்பது, முன் ஜாமீன் கொடுப்பது போன்றவற்றால் வீண் பிரச்சனைகளை சந்திப்பீர்கள். தேவையற்ற வம்பு, வழக்குகள் உண்டாகி மன சஞ்சலங்கள் ஏற்படும்.

தொழில், வியாபாரம்

தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு லாபங்கள் குறைவாக இருந்தாலும் வர வேண்டிய வாய்ப்புகளுக்கு தடை இருக்காது. நிறைய போட்டிகளையும் சந்திக்க வேண்டியிருக்கும். தேவையற்ற பயணங்களை தவிர்த்துவிடுவது நல்லது. அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் தடைகளுக்குப்பின் கிடைக்கும். கூட்டாளிகளை அனுசரித்துச் செல்லவும்.

உத்தியோகம்

பணியில் வேலைப் பளு அதிகமாக இருந்தாலும் உடனிருப்பவர்களின் ஒத்துழைப்புகள் வேலைப்பளுவை குறைக்க உதவும். பிறர் விஷயங்களில் தலையீடு செய்யாதிருப்பது நல்லது. எதிர்பார்க்கும் ஊதிய உயர்வுகளில் தாமத நிலை ஏற்படும். புதிய வேலை தேடுபவர்கள் கிடைப்பதை பயன்படுத்திக்கொள்வது நல்லது. சிலருக்கு எதிர்பாராத இடமாற்றங்கள் அலைச்சலை ஏற்படுத்தும்.

அரசியல்

மக்களின் தேவையறிந்து செயல்பாட்டால் பெயர், புகழை காப்பாற்றிக்கொள்ள முடியும். கட்சிப் பணிகளுக்காக நிறைய வீண் செலவுகளை செய்யவேண்டியிருக்கும். தேவையற்ற பயணங்களால் அலைச்சல்கள் அதிகரிக்கும். மேடைப் பேச்சுகளில் கவனமுடன் செயல்படுவது நல்லது. உடன் பழகுபவர்களை நம்பி எந்தவொரு காரியத்தையும் ஒப்படைக்காமலிருப்பது உத்தமம்.

விவசாயிகள்

பயிர் விளைச்சல் சுமாராக இருக்கும். உழைப்பிற்கான பலனைப் பெறுவதில் இடையூறுகள் உண்டாகும். அரசு வழியில் எதிர்பார்க்கும் மானிய உதவிகள் தாமதப்படும். சந்தையிலும் விளைபொருளுக்கேற்ற விலை கிடைக்காது. பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் உண்டாகக்கூடிய காலமென்பதால் தேவையற்ற செலவுகளைக் குறைக்கவும்.

பெண்கள்

உடல் ஆரோக்கியத்தில் வயிறு, சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் தோன்றிமறையும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் அமையப்பெறுவதில் தடைகள் ஏற்படும். பணவரவுகளில் நெருக்கடிகள் உண்டாகக்கூடிய காலம் என்பதால் ஆடம்பரச் செலவுகளை தவிர்க்கவும்.

கலைஞர்கள்

புதிய வாய்ப்புகள் கிடைக்கப்பெற்றாலும் அது தகுதிகேற்றதாக இருக்கது. ரசிகர்களின் ஆதரவுகள் குறையாமலிருப்பதால் எதிலும் உற்சாகத்துடன் ஈடுபடமுடியும். கார், பங்களா வாங்கும் முயற்சிகளில் கடன்கள் அதிகரிக்கும். தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பது நல்லது.

மாணவ - மாணவியர்

கல்வியில் சற்று மந்தமான நிலையே இருக்கும். எதிர்பார்க்கும் மதிப்பெண்களைப் பெற அதிக முயற்சிகளை மேற்கொள்வது நல்லது. தேவையற்ற நண்பர்களின் சேர்க்கை உங்களை வேறுபாதைக்கு அழைத்துச் செல்லுமென்பதால் நண்பர்கள் விஷயத்தில் கவனம் தேவை.

உடல் ஆரோக்கியம்

உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் உண்டாகும். குடும்பத்திலுள்ளவர்களாலும் மருத்துவச் செலவுகள் ஏற்படும். உணவு விஷயங்களில் கவனமுடனிருப்பது நல்லது. தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பதால் அலைச்சல்களை குறைத்துக் கொள்ள முடியும்.

உத்திராடம் 2, 3, 4 பாதம்

மனகுழப்பம் நீங்கி தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். மற்றவர்களிடம் பழகும் போது கவனமாக இருப்பது நல்லது. சமூகத்தில் கவுரவம் அந்தஸ்து அதிகரிக்கும். தொழில் வியாபாரம் தொடர்பான பணிகளில் கூடுதல் கவனம் செலுத்தி அவற்றை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். வியாபாரம் தொடர்பான பயணங்கள் லாபம் தருவதாக இருக்கும்.

திருவோணம்

உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகள் கொடுத்த வேலைகளை கவனமாக செய்து முடித்து பாராட்டு பெறுவார்கள். செயல் திறமை அதிகரிக்கும். குடும்பத்தில் சுகமும், நிம்மதியும் இருக்கும். குடும்பத்திற்கு அதிகப்படியான வருமானமும் கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே சகஜ நிலை காணப்படும். குழந்தைகள் திறமையை கண்டு அவர்களை பாராட்டுவீர்கள்.

அவிட்டம் 1,2 பாதம்

உறவினர் வருகை இருக்கும். யாரிடம் பேசும் போதும் நிதானமாக பேசுவது நன்மை தரும். பெண்களுக்கு எதிலும் மிகவும் கவனமாக ஈடுபடுவது நன்மை தரும். திட்டமிட்டு செயல்படுவது வெற்றிக்கு உதவும். மாணவர்களுக்கு உயர்கல்வி தொடர்பான சந்தேகங்களை மற்றவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்வீர்கள்.

பரிகாரம்

சனிக்கிழமைகளில் அனுமான் கோவிலை வலம் வரவும்.

மலர் பரிகாரம்

வெற்றிலை மாலை கட்டி அனுமனுக்கு சூட்டவும். மல்லிகை மலரை பெருமாளுக்கு அர்ப்பணித்து அர்ச்சனை செய்யவும்.

அதிர்ஷ்ட திசைகள்: கிழக்கு, தெற்கு

அதிர்ஷ்ட நிறம்: வெளிர் நீலம், மஞ்சள்

அதிர்ஷ்ட எண்கள்: 4, 6

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com