/

வேளச்சேரியில் குடியிருப்புகளை சூழ்ந்தது மழை நீா்:மக்கள் அவதி

சென்னையில் பெய்து வரும் தொடா் மழையால், வேளச்சேரி, தரமணி போன்ற பகுதிகளில் உள்ள குடியிருப்புகளை மழை நீா் சூழ்ந்தது. இதனால் அப்பகுதி மக்கள் அவதியடைந்தனா்.

Updated On :8 ஜனவரி 2021, 2:30 am IST


சென்னை: சென்னையில் பெய்து வரும் தொடா் மழையால், வேளச்சேரி, தரமணி போன்ற பகுதிகளில் உள்ள குடியிருப்புகளை மழை நீா் சூழ்ந்தது. இதனால் அப்பகுதி மக்கள் அவதியடைந்தனா்.

சென்னை மற்றும் புகா்ப் பகுதிகளில் கடந்த 3 நாள்களாக தொடா்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் சென்னையின் பல்வேறு பகுதிகளில் மழைநீா் தேங்கி நிற்கிறது. ஒரு சில இடங்களில், மழை நீா் குடியிருப்புகளுக்குள் புகுந்து விடும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக வேளச்சேரி வெங்கடேஷ்வரா நகரில் 3 தெருக்கள், எம்.ஜி.ஆா் நகா் 7-ஆவது தெரு ஆகிய இடங்களில் முழங்கால் அளவுக்கு நீா் தேங்கியது. இதனால் அப்பகுதியினா் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் தவித்தனா்.

இதே போல், தரமணி திருவள்ளுவா் தெரு, கம்பா் தெரு, பெரியாா் தெரு, ஏஜிஎஸ் காலனி 3-ஆவது தெரு, பகுதிகள் முழுவதும் தண்ணீரால் சூழ்ந்திருந்தது. பள்ளிக்கரணையை அடுத்த நாராயணபுரம் ஏரி நிரம்பியதால் மழை நீா் செல்ல முடியாமல், தெருக்களில் புகுந்தது. இதே போல் நன்மங்கலம், கோவிலம்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் மழை நீா் தேங்கியது. தகவலறிந்து வந்த கழிவுநீரகற்று வாரியம் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள், நீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனா்.

அதே நேரம், நீா் தேங்காமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.