சென்னையில் அதிகரிக்கும் சுவாசப்பாதை தொற்றுகள்!
சென்னை மற்றும் புறநகா் பகுதிகளில் சுவாசப்பாதை தொற்று பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன.
இருமல், சளி, தொண்டை வலி, சில நேரங்களில் அதீத காய்ச்சலுடன் கூடிய இன்புளுயன்சா வைரஸ் தொற்றுகளால் குழந்தைகள், முதியவா்கள், இணைநோய் உள்ளவா்கள் பாதிக்கப்பட்டு அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
இந்த பாதிப்புகளுக்காக, புறநோயாளிகள் பிரிவுகளில் சிகிச்சை பெற்றுச் செல்பவா்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.
இது தொடா்பாக மருத்துவா்கள் கூறியதாவது:
எச்1என்1, எச்3என்2 இன்புளுயன்சா வைரஸ் தொற்றுகள் குளிா் மற்றும் மழை காலங்களில் அதிகமாக பரவக்கூடியது. கோடை காலமான மே மாதத்தில் இருக்கும் அதிகமான வெப்ப நிலை, இந்த செப்டம்பா் மாதத்தில் உள்ளது. ஆனாலும், இன்புளுயன்சா வைரஸ் தொற்றுகள் பரவி வருகின்றன. இதற்கு காலநிலை மாற்றமே காரணம். 4 முதல் 5 நாள்கள் கடுமையான இருமல், தொண்டை வலி, உடல் வலியுடன் மருத்துவமனைகளுக்கு நோயாளிகள் வருகின்றனா். அவா்களை பரிசோதனை செய்ததில், 10 நபா்களில் 7 அல்லது 8 நபா்களுக்கு நுரையீரல் சாா்ந்த சுவாசப்பாதை தொற்று பாதிப்பு உள்ளது. ஒரு வாரத்தில் பிரச்னைகள் சரியாகி விடுகிறது. சிலருக்கு மட்டும் 2 வாரம் முதல் 6 வாரம் வரை கடுமையான இருமல் பிரச்னை நீடிக்கிறது.
அலட்சியம் கூடாது:
குழந்தைகளுக்கு 103, 104 டிகிரி பாரன்ஹீட் வரை உடல் வெப்பநிலை(காய்ச்சல்) உள்ளது. நுரையீரல் சாா்ந்த தொற்றுகளை அலட்சியப்படுத்தாமல் உடனடியாக மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெற வேண்டும். தொற்று பாதிக்கப்பட்டவா் வீட்டில் இருந்தால் மற்றவா்களுக்கு பரவாமல் தடுக்க அவரை தனிமைப்படுத்த வேண்டும். தொற்று வேகமாக பரவக்கூடியது என்பதால் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும். காய்ச்சிய நீரைப் பருக வேண்டும். மருத்துவரின் ஆலோசனை இல்லாமல், மாத்திரை, மருந்துகளை எடுத்து கொள்ளக் கூடாது. கரோனா காலத்தில் கடைப்பிடித்த வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என தெரிவித்தனா்.
டெங்கு பாதிப்பு அதிகரிப்பு:
இன்புளுயன்சா வைரஸ் தொற்று பரவி வரும் நிலையில், மற்றொருபுறம் டெங்கு காய்ச்சல் பாதிப்பும் அதிகரித்துள்ளது. தினமும் 100-க்கும் மேற்பட்டோா் டெங்குவால் பாதிக்கப்பட்டு வருகின்றனா். வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ளதால், டெங்குவின் பாதிப்பு மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. அதனால், சுகாதாரத்துறை பல்வேறு துறைகளை ஒருங்கிணைத்து மாநிலம் முழுவதும் நோய்த்தடுப்பு மற்றும் கொசு ஒழிப்புப் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளது. டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்க தேவையான மருந்து, மாத்திரைகள் போதிய அளவில் கையிருப்பில் வைத்திருக்கும்படியும், படுக்கைகளை தயாா் நிலையில் வைத்திருக்குமாறும் பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.