சென்னை: நடிகர் தனுஷின் அடுத்த படத்தில் தனது மகள் சுப்புலக்ஷ்மி ஜோடியாக நடிக்கிறார் என்று பரவிய தகவலுக்கு நடிகை கவுதமி விளக்கமளித்துள்ளார்.
கடந்த 10 வருடங்களுக்கு மேலாக நடிகர் கமலுடன் வாழ்ந்து வந்த நடிகை கவுதமி சமீபத்தில் அவரை விட்டு பிரிந்தார். தனது மகள் சுப்புலக்ஷ்மியின் எதிர்காலம் கருதிதான் இந்த முடிவை எடுத்ததாக அப்போது அவர் அறிவித்தார்.
இந்நிலையில் கவுதமியின் மகளான சுப்புலட்சுமி, நடிகர் தனுஷ் நடிக்க உள்ள 'வேலையில்லா பட்டதாரி-2' வில் நடிக்கவிருப்பதாக கோலிவுட்டில் நேற்று ஒரு தகவல் பரவியது.
இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள கவுதமி, 'என்னுடைய மகள் குறித்து வெளிவந்த செய்திகள் அனைத்தும் வதந்திதான். பொதுவாக நான் வதந்திகளுக்கு விளக்கமளிப்பதில்லை. ஆனால் இது என் மகளின் எதிர்காலம் பற்றியது என்பதால் விளக்கம் கொடுக்கிறேன். என்னுடைய மகள் தற்போது படிப்பில் மட்டுமே கவனம் செலுத்துகிறார். நடிப்பு பற்றி எந்த முடிவும் இதுவரை எடுக்கவில்லை' என்று தெரிவித்துள்ளார்.