
விரைவில் நடைபெற உள்ள தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலில்நடிகர் சங்கம் தலையிடாது என்று தென்னிந்திய நடிகர் சங்கம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக இன்று தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
கடந்த சில நாட்களாக பத்திரிக்கை ஊடகம் மற்றும் திரைத்துறையினர் மத்தியில் தயாரிப்பாளர் சங்க தேர்தலில் நடிகர் சங்கம் தலையிடப் போவதாக பரபரப்பான செய்திகள் வந்தபடி உள்ளன. அதுபற்றி எங்களின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்த கடந்த செயற்குழுவில் விவாதிக்கப்பட்டது.
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் என்பது மிகப்பெரிய அமைப்பு. திரை உலகின் முதுகெலும்பு போன்ற அதனது தலைமையை தீர்மானிக்க வேண்டியது அதை சார்ந்த உறுப்பினர்கள் தான். அதில் ஓட்டுரிமை இல்லாத தென்னிந்திய நடிகர் சங்கம் எக்காரணத்தை முன்னிட்டும் தலையிடாது.
ஆனால் அதே சமயம், எங்களது சங்கத்தில் உறுப்பினராக உள்ள நடிகர்கள் மற்றும் தற்போதைய நிர்வாகத்தில் பொறுப்பில் உள்ள நடிகர்கள் பலரும் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ள நிலையில் தயாரிப்பாளர் சங்கம் பற்றி அவர்களின் நிலைப்பாடு மற்றும் ஊடகங்களில் தேர்தல் பற்றி அவர்கள் அளிக்கும் பேட்டி, ஆகியவற்றில் அவர்களை உங்கள் சங்க உங்க உறுப்பினராக கருதியே நீங்கள் அணுகவேண்டும்.
நடிகர் சங்கத்துடன் அதை தொடர்புப்படுத்தி பார்க்க வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். அதேபோல் நீங்களும் தென்னிந்திய நடிகர் சங்கத்தை தொடர்புப்படுத்தி பேசுவதை தவிர்க்கும்படி உங்களது உறுப்பினர்களுக்கு தெரிவிக்க வேண்டுகிறோம்.
தங்களின் சங்கம் சுதந்திரமாக தேர்தலை நடத்தி - அதன்மூலம் வரும் நிர்வாகத்துடன் இணைந்து செயல்படவே நாங்கள் விரும்புகிறோம். இதுவே எங்கள் நிலைப்பாடு.
இவ்வாறு தென்னிந்திய நடிகர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.