'ஜிகர்தண்டா', 'ஜோக்கர்' உள்ளிட்ட படங்களில் தனது நடிப்பின் மூலம் கவனம் ஈர்த்த குரு சோமசுந்தரம் தற்போது புதிய படம் ஒன்றில் வில்லனாக நடிக்க இருக்கிறார்.
தியாகராஜன் குமாரராஜா இயக்கிய 'ஆரண்ய காண்டம்' படத்தில் 'காளையன்' என்ற கதாபாத்திரத்தில் அறிமுகமானவர் குரு சோமசுந்தரம். தொடர்ந்து ஜிகர்தண்டா, தூங்காவனம், குற்றமே தண்டனை உள்ளிட்ட படங்களில் நடித்து புகழ்பெற்றார்.
இறுதியாக சென்ற மாதம் வெளியான 'ஜோக்கர்' திரைப்படத்தில் கதாநாயகனாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.தற்போது அவர் இயக்குனர் குழந்தை வேலப்பன் இயக்கி வரும் 'யாக்கை' என்னும் திரைப்படத்தில் வில்லனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
இதுகுறித்தது இயக்குனர் குழந்தை வேலப்பன் வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
'ஜோக்கர்' படம் சோமசுந்தரத்தின் நடிப்பின் ஒரு பக்கத்தை வெளிப்படுத்தியது என்றால், அவரது நடிப்பின் மறுபக்கத்தை 'யாக்கை' மூலம் காணலாம். இந்த படத்தில் முற்றிலும் புதிதான ஒருகதாபாத்திரத்தில் அவர் நடிக்க உள்ளார். நடிப்பு என்றல் எந்த ஒரு எல்லைக்கும் சென்று நடிக்க விரும்பும் அவருடன் இணைந்து பணிபுரிவது மகிழ்ச்சியான ஒருவிஷயம். இந்தப் படம் அவருக்கு மேலும் சிறப்புகளை கொண்டு வந்து சேர்க்கும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முத்துராமன் தயாரிக்கும் இந்தப் படத்தில் கிருஷ்ணா மற்றும் ஸ்வாதி நடிக்கின்றனர்.