பெரியாரைப் பற்றி சும்மா பேசினால் போதுமா? சத்யராஜுக்கு கமல்ஹாசன் கேள்வி!
சென்னை: தந்தை பெரியார் பற்றி சும்மா பேசிக் கொண்டிருந்தால் மட்டும் போதுமா? செயலில் எதுவும் காட்ட வேண்டாமா என்று சத்யராஜூக்கு நடிகர் கமல்ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
தற்போது தமிழக அரசியலில் நடந்து வரும் விவகாரங்கள் குறித்த தன்னுடைய கருத்துக்களை நடிகர் கமல்ஹாசன் அவ்வப்பொழுது தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் மறைமுகமாக வெளியிட்டு வருகிறார்.
அந்த வரிசையில் தமிழக முதலமைச்சரான பன்னீர்செல்வம் நேற்றிரவு அதிமுக பொதுச்செயலாளரான சசிகலாவுக்கு எதிராக கருத்து தெரிவித்து பேட்டியளித்திருந்தார். இதனைத் தொடர்ந்து தமிழக அரசியல் களம் சூடு பிடித்தது.
இது தொடர்பாக கருத்துக்களை நேற்றிரவே டிவிட்டரில் கமல்ஹாசன் தெரிவித்திருந்தார். அதே போல இது தொடர்பான கருத்துக்கள் இருந்தால் மற்றவர்களும் அதனை தயங்காமல் வெளியிட வேண்டும் என்று அவர் நினைக்கிறார். அதில் அவர் நடிகர் சத்தியராஜை நோக்கி அவர், "சத்யராஜ் பெரியார் பெரியார்னு வாய் கிழியப்பேசும் நாம,இந்த நேரத்துல ஒரு dubsmash ஆவது போட வேண்டாமா.? .நாம் முதலில் மனிதர் then only actors" என்று பதிவிட்டுள்ளார்.
அதேபோல் நடிகர் மாதவனை நோக்கி அவர் தமிழகத்தில் நிலவும் சிக்கலைப் பற்றி பேசுங்கள். உங்கள் கருத்து மாறுபட்டதாக இருந்தாலும் பரவாயில்லை. பேசுங்கள் என்று கருத்து கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.