/

இருமடங்கான திரையரங்குகளின் எண்ணிக்கை: மீசைய முறுக்கு வெற்றி குறித்து சுந்தர்.சி

நகரங்களில் மட்டும்தான் மீசைய முறுக்கு நல்ல வசூல் பெறும் என நினைத்தோம்...

News image
Updated On :29 ஜனவரி 2024, 4:30 pm

எழில்

ஹிப்ஹாப் தமிழா கதாநாயகனாக அறிமுகமாகி கடந்த வாரம் வெளியான படம் - மீசைய முறுக்கு. இந்தப் படத்தில் அவர் கதாநாயகனாக மட்டும் நடிக்கவில்லை. கதை, திரைக்கதை, வசனம், இசை, பாடல்கள், இயக்கம் எனப் பல்வேறு பொறுப்புகளையும் ஏற்றுக்கொண்டார். ஆத்மிகா, விவேக் உள்ளிட்ட பலரும் நடித்துள்ள இந்தப் படத்தை சுந்தர்.சி தயாரித்துள்ளார்.

இந்தப் படம் முதல் மூன்று நாள்களில் நல்ல வசூலைப் பெற்றதால் இதுதொடர்பான செய்தியாளர்கள் சந்திப்பில் படக்குழுவினர் கலந்துகொண்டார்கள். அப்போது படத்தயாரிப்பாளரும் இயக்குநருமான சுந்தர்.சி கூறியதாவது:

நகரங்களில் மட்டும்தான் மீசைய முறுக்கு நல்ல வசூல் பெறும் என நினைத்தோம். ஆனால் அனைத்துப் பகுதிகளிலும் நல்ல வசூலைப் பெற்று படம் ஹிட் ஆகியுள்ளது. முதல் 250 திரையரங்குகளில்தான் படத்தை வெளியிட்டோம். இப்போது அந்த எண்ணிக்கை இருமடங்காகிவிட்டது. கேரளாவில் திரையரங்குகள் கிடைக்க முதலில் கடினமாக இருந்தது. ஆனால் இப்போது அங்கிருந்து நிறைய அழைப்புகள் வருகின்றன.

நானும் நிறைய படங்கள் இயக்கியுள்ளேன். நடித்துள்ளேன். ஆனால் இதுபோன்ற ஒரு வெற்றியைச் சந்தித்ததில்லை. கடந்த வாரம் வெளியான மீசைய முறுக்கு, விக்ரம் வேதா ஆகிய இரு படங்களும் மக்களை மீண்டும் திரையரங்குகளுக்கு அழைத்து வந்துள்ளது. நல்ல படம் வந்தால் எவ்வளவு செலவானாலும் திரையரங்குகளுக்கு வருவோம் என்று மக்கள் நிரூபித்துள்ளார்கள். ஜிஎஸ்டி போல எத்தனை வரி வந்தாலும் சினிமா அழியாது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.