ரூ. 100 கோடியைத் தாண்டிய வசூல்: சீனாவில் சாதனை படைக்கும் டங்கல்!
அமீர் கான், சாக்ஷி தன்வார் நடிப்பில் நிதேஷ் திவாரி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் - டங்கல். இந்தியாவில் 4300 திரையரங்குகளில் ஹிந்தி, தமிழ், தெலுங்கு என மூன்று மொழிகளில் வெளியான டங்கல், வெளிநாடுகளில் 1000 திரையரங்குகளில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.
டங்கல் படம் கடந்த வாரம் வெள்ளியன்று சீனாவில் வெளியானது. அங்கு மட்டும் 7000 திரையரங்குகளில் வெளியானது. இதற்கு முன்பு வேறெந்த இந்தியப் படமும் சீனாவில் இவ்வளவு திரையரங்குகளில் வெளியானதில்லை. சீனாவில் மொத்தம் 40,000 திரையரங்குகள் உள்ளன (இந்தியாவில் 8500). அங்கு டங்கல் படம், Shuai Jiao Baba என்கிற பெயரில் வெளியானது.
இதற்கு முன்பு அமீர் கானின் பிகே படம், 2015ல் சீனாவில் 4000 திரையரங்குகளில் வெளியானது. 16 நாள்களில் ரூ. 100 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது. எனவே, அதைவிடவும் டங்கல் வசூலிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில் டங்கல் படம் முதல் 5 நாள்களில் ரூ. 123 கோடி வசூலை அள்ளி சாதனை செய்துள்ளது. அதாவது நான்கு நாள்களில் ரூ. 100 கோடி வசூலைப் பெற்றது. சீனாவில் வசூல் புரட்சி செய்துவரும் டங்கல், 5-ம் நாள் வசூல் நிலவரத்துக்குப் பிறகு சீனாவில் அதிகம் வசூலித்த இந்தியப் படம் என்கிற பெருமையைப் பெற்றுள்ளது.