
நடிகர் ரஜினிகாந்த் 10 வருடங்களுக்கும் மேலாக தனது ரசிகர்களை நேரில் சந்திக்காமலே இருந்தார். கோடம்பாக்கத்தில் இருக்கும் ரஜினிக்குச் சொந்தமான ராகவேந்திரா திருமண மண்டபத்தில் இன்று ரஜினி மற்றும் ரசிகர் சந்திப்புக் கூட்டம் ஒருங்கிணைக்கப் பட்டு நடைபெறும் என கடந்த வாரத்திலிருந்தே அறிவிப்புகள் எழுந்த வண்ணம் இருந்தன. அதையொட்டி இன்று நடைபெற்ற ரசிகர் சந்திப்பில் ரஜினி தமது ரசிகர்களிடம் உரையாடினார். அந்த உரையாடலில் தனது ரசிகர்களுக்கு பிரத்யேகமாக மது அருந்துதல் தவறு, புகை பிடிப்பது தவறு எனும் அறிவுரைகளை வழங்கிய ரஜினி கூடுதலாக அவரது அரசியல் பிரவேசம் பற்றிய ரசிகர்கள் கேள்விகளுக்கு பதிலளிக்கையில்; ஊழலற்ற அரசு அமைவதையே தாம் விரும்புவதாகவும், சில அரசியல்வாதிகள் அரசியல் ஆதாயத்திற்காக தம்மைவந்து சந்தித்துச் செல்வதாகக் கூறி இருந்தார்.
ரஜினியை சமீப காலங்களில் அதிகம் சந்தித்து செல்வது பாஜக பிரமுகர்களே என்பதால் ரஜினியின் இந்த பதிலை ஒட்டிய கருத்தை அறிய தமிழிசையைத் தொடர்பு கொண்டது செய்திச் சேனல் ஒன்று. அதற்கு பதிலளிக்கும் விதமாகத் தமிழிசை சொன்னது; பாஜக ரஜினியை முன்னிறுத்தி தமிழகத்தில் காலூன்ற நினைப்பதாகக் கூறுவது சரியல்ல; ரஜினி தமது ரசிகர் சந்திப்பில் ரசிகர்களுக்காக சில அறிவுரைகள் வழங்கி இருக்கிறார், அவையெல்லாம் சமூக நலனுக்கு உகந்தவையே. அதோடு ஊழலற்ற நல்லாட்சிக்கே தனது ஆதரவும் என்று அவர் தெரிவித்திருப்பதும் ஆரோக்கியமான விசயமே! இந்தியாவில் ஊழலை ஒட்டு மொத்தமாக அழிக்கும் முயற்சியில் உள்ள பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு இதை வரவேற்கிறது. ஆனால் அரசியல் ஆதாயத்திற்காக தன்னை சில அரசியல்வாதிகள் வந்து சந்தித்து செல்வதாக ரஜினி கூறி இருப்பதில் எனக்கு உடன்பாடில்லை. பாஜக வினர் ரஜினியைச் சந்தித்ததெல்லாம் மரியாதை நிமித்தமாக மட்டுமே தவிர அரசியல் ஆதாயத்திற்காக அல்ல! என்று தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.