'காலா' திரைப்பட கதை எனக்கு சொந்தமானது: உதவி இயக்குநர் புகார்
நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் 'காலா' திரைப்படத்தின் பெயரும், கதையும் தனக்குச் சொந்தமானது என தமிழ் திரைப்பட உதவி இயக்குநர் ராஜசேகரன் சென்னை பெருநகர காவல் ஆணையரகத்தில் செவ்வாய்க்கிழமை புகார் மனு அளித்தார்.
இதுதொடர்பாக சென்னை போரூரை அடுத்த காரப்பாக்கத்தைச் சேர்ந்த திரைப்பட இயக்குநர் ராஜசேகரன், காவல் ஆணையரகத்தில் கொடுத்த புகார் மனு விவரம்:
தமிழ் திரைப்படத் துறையில் உதவி இயக்குநராக பல ஆண்டுகளாகப் பணிபுரிந்து வருகிறேன். 'கரிகாலன்' என்ற தலைப்பை ஏற்கெனவே நான் பதிவு செய்துவிட்டேன். 'கரிகாலன்' என்ற தலைப்பு, கதையின் மூலக்கரு முழுவதும் என்னுடைய உருவாக்கம்.
பண்டைய காலத்தில் வாழ்ந்த கரிகால சோழனின் வாழ்க்கை வரலாற்றையும், அவரது அறச் செயல், வீரச் செயல் போன்றவற்றை மையப்படுத்தி உருவாக்கப்பட்டதே 'கரிகாலன்' திரைப்படத்தின் கதையாகும். இந்த திரைப்படத்தை இயக்குவதையே என்னுடைய லட்சியமாக கொண்டு உள்ளேன். இதில் நடிகர் ரஜினியை நடிக்க வைப்பதற்காக அவரது ரசிகர் மன்றத் தலைவராக இருந்த சத்தியநாராயணாவை பலமுறை சந்தித்து கதை குறித்து பேசியுள்ளேன்.
இந்நிலையில், இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்க உள்ள புதிய திரைப்படத்தின் பெயர் 'காலா கரிகாலன்' என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியளிக்கிறது. என்னால் உருவாக்கப்பட்ட 'கரிகாலன்' என்ற தலைப்பையும், கதையின் மூலக்கருவையும் இயக்குநர் ரஞ்சித் திருடி, அதை மறுவடிவமைப்பு செய்து இந்த திரைப்படத்தை இயக்குகிறார்.
எனவே, இந்தப் பிரச்னையில் காவல் துறை தலையிட்டு சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.