சென்னை வளசரவாக்கத்தில், சினிமா ஃபைனான்சியர் கடனைக் கேட்டு மிரட்டியதால், திரைப்பட இயக்குநர் சசிகுமாரின் மைத்துனர் தூக்கிலிட்டு தற்கொலை செய்துக் கொண்டார். அவருடைய பிரதேசப் பரிசோதனை இன்று முடிந்த நிலையில் ஆம்புலன்ஸ் மூலம் அவரது சொந்த ஊரான மதுரை கோமதிபுரத்துக்கு எடுத்துச் செல்லப்படவுள்ளது. ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அசோக்குமார் உடலுக்குத் திரைத்துறையினர் அஞ்சலி செலுத்தினார்கள்.
ராயப்பேட்டை மருத்துவமனையில் இயக்குநர் அமீர், செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கந்துவட்டி கொடுமையால் அசோக் குமார் தற்கொலை செய்த வழக்கில், காவல்துறை சிறப்பாகச் செயல்படுகிறது. மானத்துக்குப் பயந்துதான் அசோக் குமார் தற்கொலை செய்துகொண்டார். இந்த வழக்கு குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்தப்படவேண்டும்
முறையான வட்டி, பைனான்ஸ் இருந்தால்தான் திரைத்துறை செழிக்கும். ஜெயலலிதா இருந்தபோது கந்துவட்டிக் கொடுமை கட்டுப்பாட்டில் இருந்தது. இப்பிரச்னையைச் சரிசெய்வதாக விஷால் கூறியிருக்கிறார். திரைத்துறையினருக்கு வங்கிகள் கடன் தர மறுப்பதால்தான் அவர்கள் கந்துவட்டிக்காரர்களிடம் செல்கிறார்கள் திரையுலகை மீட்டெடுக்க ஐ.ஏ.எஸ் அதிகாரி நிர்வகிக்கும் திரைப்படக்கழகம் அமைக்கப்படவேண்டும். தொழிலை முறைப்படுத்த வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.
வளசரவாக்கம், ஆற்காடு சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர் பா. அசோக்குமார் (44). இவர் பிரபல இயக்குநரும், நடிகருமான சசிகுமாரின் மைத்துனர். சசிகுமாரின் திரைப்பட நிறுவனத்தை அசோக்குமார் நிர்வகித்து வந்தார். அத்துடன் சசிகுமாரின் திரைப்பட நிறுவனத்தின் இணைத் தயாரிப்பாளராகவும், அலுவலக நிர்வாகியாகவும் இருந்தார். வழக்கமாக காலை நேரத்தில் அலுவலகம் செல்லும் அசோக்குமார் செவ்வாய்க்கிழமை செல்லவில்லை. இந்நிலையில் அலுவலக ஊழியர்கள், அவரது செல்லிடப்பேசியைத் தொடர்பு கொண்டபோதும் அவரிடமிருந்து பதில் இல்லை. அதையடுத்து, அசோக்குமார் வீட்டுக்கு ஊழியர்கள் சென்று பார்த்தபோது, அவர் தனது உடற்பயிற்சி அறையில் சடலமாகத் தூக்கில் தொங்கியதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். தகவலறிந்த வளசரவாக்கம் போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பினர்.
வீட்டை போலீஸார் சோதனையிட்டபோது, அசோக்குமார் எழுதிய இருபக்கக் கடிதம் கிடைத்தது. அதில், 'தங்கள் நிறுவனம் தயாரித்த திரைப்படங்கள் அடுத்தடுத்து தோல்வியடைந்ததால் நஷ்டம் ஏற்பட்டது. அதன் காரணமாக பிரபல திரைப்பட ஃபைனான்சியர் அன்புச்செழியனிடம் கடன் பெற்றதாகவும், அவர் கடந்த 6 மாதமாக பணத்தைக் கேட்டு தொல்லை தந்து வந்ததுடன், பலவிதமாக மிரட்டல் விடுத்தும் வந்தார். வேறு வழியின்றி தற்கொலை செய்து கொள்ளும் முடிவை எடுத்தேன்' என உருக்கமாகக் குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து இயக்குநர் சசிகுமார், இயக்குநர்கள் பாலா, அமீர், சமுத்திரக்கனி ஆகியோருடன் வளசரவாக்கம் காவல் நிலையத்துக்கு செவ்வாய்க்கிழமை இரவு சென்று புகார் தெரிவித்தார். அவரது புகாரை அடுத்து திரைப்பட ஃபைனான்சியர் அன்புச்செழியன் மீது தற்கொலைக்குத் தூண்டியதாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.