அம்மா நடிகையா நானா? முதலில் தயங்கி விட்டு இன்று பிளந்து கட்டும் நடிகை!

ஸ்ரீவித்யா எவ்வளவு பெரிய நடிகை! அவரே இப்படிச் சொல்கிறார் என்றால் அதில் பொருளில்லாமல் இருக்காது.
அம்மா நடிகையா நானா? முதலில் தயங்கி விட்டு இன்று பிளந்து கட்டும் நடிகை!
Published on
Updated on
2 min read

‘திரைக்கதை மன்னர்’ என்று புகழப்படும் நடிகர் கம் இயக்குனர் பாக்யராஜின் ‘வீட்ல விசேஷங்க’ திரைப்படம் மூலமாகத் தமிழுக்கு நாயகியாக அறிமுகமானவர் நடிகை பிரகதி. அறிமுகப்படம் வெற்றிப்படமாகவே அமைந்த போதிலும் அடுத்தடுத்த பரபரப்பாக படங்களில் ஒப்பந்தமாகாத நிலையில் பெரிதாக சோபிக்காத சில திரைப்படங்களில் நாயகியாக நடித்து விட்டு பிரகதி சோர்ந்திருந்த நேரம் அது. ஒரு படப்பிடிப்பில் மறைந்த நடிகை ஸ்ரீவித்யாவுடன் இவர் நடித்துக் கொண்டிருந்த சமயத்தில் பிரகதிக்கு டோலிவுட்டில் இருந்து ஒரு வாய்ப்பு வருகிறது. தொலைபேசியில் அழைத்தவர்கள்... தாங்கள் சுரேஷ் புரொடக்‌ஷன்ஸில் இருந்து பேசுவதாகவும் தாங்கள் புதிதாகத் துவங்கவிருக்கும் ஒரு தெலுங்குப் படத்தில் காஜல் அகர்வாலுக்கு அம்மாவாக நடிக்க பிரகதிக்கு விருப்பமா? என்றும் கேட்டிருக்கிறார்கள். முதலில் அதிர்ந்து தான் போனார் பிரகதி. ஏனென்றால் அப்போது அவருக்கு வயது வெறும் 24. ஆண்டவா இதென்ன சோதனை? அம்மாவா? நானா? என்று பெரிதும் தயங்கினாலும் வாய்ப்பு வேண்டாம் என்று ஒதுக்கவில்லை. குழப்பத்தில் ஆழ்ந்திருந்தவரிடம் நடிகை ஸ்ரீவித்யா என்னவென்று வினவவே... தனக்கு வந்த இந்த சோதனை அழைப்பைப் பற்றி விவரித்திருக்கிறார் பிரகதி. ஸ்ரீவித்யா சற்றும் யோசிக்கவில்லை, ‘அதனாலென்ன, நீ நடிகை... எந்த வேடமாக இருந்தாலும் நடிக்கத்தானே வேண்டும். அம்மாவா என்று ஏன் யோசனை? நான் கூட வெகு இளம் வயதில் அம்மா நடிகையாக ஆனேன். நீயும் அப்படி முடிவெடு என்று சொல்லவில்லை. அம்மா வேடத்திற்கும் பிரகாஷமான எதிர்காலம் இருக்கிறது. நீ ஹீரோயினாகவே மட்டும் தான் நடிப்பேன் என்று முடிவெடுத்தால் நிறையக் காத்திருக்க வேண்டியதிருக்கும். ஒருவேளை வாய்ப்புகள் சரியாக அமையாவிட்டால் என்ன செய்வாய்? சுரேஷ் புரொடக்‌ஷன்ஸ் தெலுங்கில் பெரிய நிறுவனம். அவர்களது படத்தில் அம்மாவாக நடிப்பதென்றால் நிச்சயம் அது சும்மா வந்து நின்று விட்டுப் போகும் வேலையாக இருக்காது. நிச்சயம் பெயர் சொல்லிக்கொள்ளும் படியாகவே இருக்கும். அதனால் என் கண் முன்னால் நீ அவர்களது வாய்ப்பை ஒப்புக் கொள் என்று அன்பாகக் கட்டளையிட்டிருக்கிறார்.

ஸ்ரீவித்யா எவ்வளவு பெரிய நடிகை! அவரே இப்படிச் சொல்கிறார் என்றால் அதில் பொருளில்லாமல் இருக்காது.

எனவே நான் எனக்கு வந்த அம்மா நடிகை வாய்ப்பை ஒப்புக் கொண்டேன். இதோ இன்றும் உங்கள் முன்னால் இளமையான அம்மாவாக நடித்துக் கொண்டிருக்கிறேன். எனக்கு இந்த வேடத்தில் ஃபீல்டு அவுட் என்ற பேச்சுக்கே இடமில்லை. என்று சிரிக்கிறார் நடிகை பிரகதி.

உண்மை தானே? ஒருவேளை ஹீரோயினாகவே தான் நடிப்பேன், என்று ஒற்றைக் காலில் நின்றிருந்தால் இன்று பிரகதி என்ற ஒரு அருமையான நடிகையை நாம் இழந்திருப்போம். வாய்ப்புக் கிடைக்காமல் தன் துக்கத்தைப் போக்கிக் கொள்ள தின்று தின்றே குண்டாகி மன உளைச்சலில் வீழ்ந்து ஒருவழியா திரையுலகை விட்டே அவர் இல்லாமல் போக நேர்ந்திருக்கும். அந்த சோகம் நேராமல் தன்னைக் காத்த பெருமை நடிகை ஸ்ரீவித்யாவையே சேரும் என நேசமுடன் தெலுங்கு யூ டியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த நேர்காணலொன்றில் பகிர்ந்திருக்கிறார் பிரகதி.

கோலிவுட், டோலிவுட் தாண்டி இன்று சின்னத்திரையிலும் இவரொரு இளைமயான அம்மா!
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com