நள்ளிரவில் வீட்டின் முன் குவிந்த காவலர்கள்: முன்ஜாமீன் கோரி ஏ.ஆர். முருகதாஸ் மனு!

சர்கார் பட இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்... 
நள்ளிரவில் வீட்டின் முன் குவிந்த காவலர்கள்: முன்ஜாமீன் கோரி ஏ.ஆர். முருகதாஸ் மனு!

விஜய் நடிப்பில் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் உருவான சர்கார் படம் தீபாவளிக்கு வெளியாகி திரையிடப்பட்டு வருகிறது. அந்தத் திரைப்படத்தில் தமிழக அரசு வழங்கிய இலவசப் பொருள்கள் குறித்த சர்ச்சைக்குரிய காட்சிகள், படத்தின் எதிர்மறைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள வரலட்சுமி சரத்குமாரின் பெயரை கோமள வல்லி என்று குறிப்பிட்டுள்ளது போன்ற காட்சிகள் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஆட்சியை விமர்சனம் செய்யும் விதமாக அமைத்திருப்பதாகவும் பெரும் சர்ச்சை உருவாகியுள்ளது. இதனால் அதிமுகவினர் சர்கார் படத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து வருகிறார்கள். படத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், குறிப்பிட்ட சில காட்சிகளை நீக்க வலியுறுத்தியும் வியாழக்கிழமை அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 
இதையடுத்து, சில திரையரங்குகளில் சில காட்சிகள் ரத்து செய்யப்பட்டன. 

சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் வீட்டில் வியாழக்கிழமை நள்ளிரவில் போலீஸார் குவிக்கப்பட்டனர். நள்ளிரவுக்கு பிறகு அவர் கைது செய்யப்படலாம் என்ற தகவலும் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது. இருப்பினும், அவரது பாதுகாப்புக்காகவே போலீஸார் அவரது வீட்டில் குவிக்கப்பட்டுள்ளதாக போலீஸ் வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் சர்கார் பட இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். முருகாதாஸின் முன்ஜாமீன் மனு இன்று பிற்பகலில் விசாரணைக்கு வரவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com