அரிவாளைக் கொண்டு கொலை மிரட்டல் விடுத்த விஜய் ரசிகர்கள் மீது புகார்!

விஜய் ரசிகர்கள் என கூறிக் கொண்டு அரிவாளுடன் சமூகவலைதளத்தில் விடியோ வெளியிட்ட 2 பேர் குறித்த விவரம் தெரிந்தவர்கள்...
அரிவாளைக் கொண்டு கொலை மிரட்டல் விடுத்த விஜய் ரசிகர்கள் மீது புகார்!
Updated on
1 min read

விஜய் ரசிகர்கள் எனக் கூறிக்கொண்டு கையில் அரிவாளை வைத்தபடி அதிமுகவினருக்குச் சமூகவலைத்தளங்களில் கொலை மிரட்டல் விடுத்த 2 பேர் மீது காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் சர்கார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். கீர்த்தி சுரேஷ், ராதாரவி, பழ.கருப்பையா, வரலட்சுமி சரத்குமார், யோகிபாபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்கள். சர்கார் படத்தில், தமிழக அரசின் இலவசப் பொருள்கள் வழங்கும் திட்டத்தை அவமதிக்கும் வகையில் காட்சிகள் இடம் பெற்றுள்ளதாகக் கூறி, அதிமுகவினர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். மேலும், சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க வேண்டும் என வலியுறுத்தி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அதிமுகவினர் போராட்டம் நடத்தினார்கள். பிறகு சர்கார் படம் மறு தணிக்கை செய்யப்பட்டு, சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கப்பட்டன. சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்கி விட்டதால், சர்கார் படப் பிரச்னை முடிவுக்கு வந்து விட்டதாக அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார். இனி அதிமுகவினர் போராட்டம் எதுவும் செய்ய மாட்டார்கள். நடிகர் விஜய்க்கும், தங்களுக்கும் இடையே எந்தப் பிரச்னையும் கிடையாது என்றார்.  

இந்நிலையில் சர்கார் படத்துக்கு எதிராக அதிமுகவினர் எதிர்ப்பு தெரிவித்த சமயத்தில், விஜய் ரசிகர்கள் எனக் கூறிக்கொண்டு கையில் அரிவாளை வைத்துக்கொண்டு இரு இளைஞர்கள் அதிமுகவினருக்கு விடியோ வழியாக மிரட்டல் விடுத்தார்கள் இந்த விடியோ சமூகவலைத்தளங்களில் பரவியது. ஆளில்லாத சமயத்தில், பேனர்களைக் கிழித்துள்ளீர்கள். மொத்த விஜய் ரசிகர்களும் ஒன்று சேர்ந்தால், அதிமுக-வில் ஒருவரும் உயிருடன் இருக்கமாட்டீர்கள்.இப்போதும் எங்களால் உங்களை வெட்ட முடியும். ஆனால் விஜய் ரசிகர்கள் இப்படிச் செய்தார்கள் என அவருடைய பெயர் கெட்டு விடும். இதனால், அடங்கிப் போகிறோம் என்று அந்தக் காணொளியில் பேசியிருந்தார்கள். இதையடுத்து இவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என பிரகாஷ் என்பவர் காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார். 

இதையடுத்து, விஜய் ரசிகர்கள் என கூறிக் கொண்டு அரிவாளுடன் சமூகவலைதளத்தில் விடியோ வெளியிட்ட 2 பேர் குறித்த விவரம் தெரிந்தவர்கள் 044 - 23452348, 23452350 ஆகிய எண்களுக்குத் தெரிவிக்கவேண்டும் என சென்னை மத்தியக் குற்றப்பிரிவு காவல்துறை அறிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com