ரஜினி ரூ. 50 லட்சம் நிவாரணம்: ரஜினி மக்கள் மன்றத்தின் மூலமாக நேரடியாக வழங்குகிறார்! 

கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு ரூ. 50 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருள்களை ரஜினி மக்கள் மன்றம் மூலம் வழங்க ரஜினி உத்தரவிட்டுள்ளார்... 
ரஜினி ரூ. 50 லட்சம் நிவாரணம்: ரஜினி மக்கள் மன்றத்தின் மூலமாக நேரடியாக வழங்குகிறார்! 
Updated on
1 min read

கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு ரூ. 50 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருள்களை ரஜினி மக்கள் மன்றம் மூலம் வழங்க ரஜினி உத்தரவிட்டுள்ளார். 

கஜா புயலால் திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை போன்ற மாவட்டங்கள் பெரும் அழிவைச் சந்தித்துள்ளதால் விவசாயிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனர். பல ஆண்டுகளாக செலவிட்டு வளர்த்த தென்னை மரங்கள், வாழை, கரும்பு உள்ளிட்டவை பெரும் சேதமடைந்துள்ளன. அதிலிருந்து விவசாயிகள் மீள பல ஆண்டுகள் ஆகும். ஆடுகள், மாடுகள் உள்ளிட்ட கால்நடைகளும் இறந்துள்ளன. கஜா புயலில் இருந்து மீண்டுவர பலரும் உதவிகளைச் செய்ய வேண்டுமென முதல்வர் பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். 

நடிகர்கள் சூர்யா, கார்த்தி மற்றும் நடிகை ஜோதிகா ரூ.50 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளனர்.  நடிகர் சிவகார்த்திகேயன் ரூ.20 லட்சம்  நிதியுதவி அளிக்கவுள்ளார்.  இதில் ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொருள்களைத் தன்னுடைய ரசிகர் மன்றத்தினர் மூலம் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குக் கொண்டு சேர்த்துள்ளார். மேலும் முதல்வர் நிவாரண நிதிக்கு அவர் ரூ.10 லட்சம் வழங்கவுள்ளார். நடிகர் விஜய் சேதுபதி ரூ.25 லட்சம் நிதியுதவி அறிவித்துள்ளார். "சார்ஜிங் லைட்' உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களைத் தருவதுடன், மரங்களை இழந்தவர்களின் தோப்புகள் புனரமைக்கப்பட்டு, அவர்களுக்கு தென்னை, மா, பலா கன்றுகளும் வழங்கப்பட உள்ளன. இந்த உதவிகள், விஜய் சேதுபதி ரசிகர் நற்பணி மன்றத்தினர் மூலம் தேவைப்படுவோருக்கு வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

நிவாரண உதவிகள் செய்ய ஒவ்வொரு விஜய் மக்கள் இயக்கத்தின் வங்கிக்கணக்குகளில் ரூ. 4.50 லட்சம் பணம் அனுப்பியுள்ளார் நடிகர் விஜய். 

இந்நிலையில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு ரூ. 50 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருள்களை ரஜினி மக்கள் மன்றம் மூலம் வழங்க ரஜினி உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக ரஜினி மக்கள் மன்றம் வெளியிட்டுள்ள ட்வீட்களில் தெரிவிக்கப்பட்டுள்ள தகவல்கள்:

நம் அன்புத்தலைவர் ரஜினிகாந்த் தன்னுடைய சார்பில் ரூ. 50 லட்சம் மதிப்புள்ள நிவாரணப் பொருள்களைப் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரஜினி மக்கள் மன்றத்தின் மூலமாக நேரடியாக வழங்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார். தலைவரின் விருப்பப்படி சென்னை ராகவேந்திரா மண்டபத்தில் இருந்து நிவாரணப் பொருள்கள் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு நாளை அனுப்பப்படும். நிவாரணப் பொருள்களை மன்றக் காவலர்கள் மூலமாக பொதுமக்களிடம் நேரடியாக கொண்டு சேர்க்கும் பொறுப்பை ஒப்படைத்த நம் அன்புத் தலைவருக்கு நன்றி என்று கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com