/

பிக் பாஸ்: கடினமான போட்டியில் வென்று இறுதி வாரத்துக்கு நேரடியாகத் தகுதி பெற்ற ஜனனி!

இவர்தான் முதல் ஆளாக வெளியேறுவார் என நினைத்தோம். இதுபோன்ற போட்டிகளில் மன வலிமை முக்கியம். அது ஜனனியிடம் உள்ளது...

News image
Updated On :15 செப்டம்பர் 2018, 10:20 am

விஜய் தொலைக்காட்சியில் பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இப்போது அதன் கடைசிக்கட்டத்தில் உள்ளது. 

இன்னும் இரு வாரங்களில் இந்நிகழ்ச்சி முடிவடையவுள்ளது. இந்நிலையில் கடைசி வாரத்துக்கு நேரடியாகத் தகுதி பெறுவதற்கான போட்டி, கடந்த இரு நாள்களாக ஒளிபரப்பானது. இப்போட்டியில் பாலாஜி, யாஷிகா, ரித்விகா, ஐஸ்வர்யா, விஜயலட்சுமி, ஜனனி, மும்தாஜ் ஆகியோர் பங்கேற்றார்கள். கடந்த வருட நிகழ்ச்சியில் பங்கேற்ற ஆரவ், சிநேகன், காயத்ரி ரகுராம், வையாபுரி, ஆர்த்தி போன்றோர் இந்த வார நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்கள். ஆரவ் தலைமையில் அவர்கள் இப்போட்டிக்கான நடுவர்களாகவும் பணிபுரிந்தார்கள். 

பிளாஸ்டிக் குடுவை ஒன்றில் நீரை நிரப்பி அதைக் கையில் ஏந்திக்கொண்டு அனைவரும் மெல்ல நகரவேண்டும். குறிப்பிட்ட கால அளவில் யாருடைய குடுவையில் நீர் குறைவாக உள்ளதோ அவர் வெளியேற்றப்படுவார். அதிகமான நீரை வைத்திருப்பவர், அடுத்தச் சுற்றுக்கு முன்னேறுவார். இதன்படி பாலாஜி, ஐஸ்வர்யா, மும்தாஜ், ரித்விகா, விஜயலட்சுமி ஆகியோர் அடுத்தடுத்து வெளியேறினார்கள். இறுதிச்சுற்றில் யாஷிகாவும் ஜனனியும் போட்டியிட்டார்கள். 

இரவில் ஆரம்பித்த இப்போட்டி, விடிய விடிய நடைபெற்று அடுத்த நாள் காலை வரை தொடர்ந்தது. இதனால் அனைவரும் மிகவும் சோர்ந்துபோனார்கள். போட்டியாளர்களுக்கு உடல்நலக்குறைவும் ஏற்பட்டது. இறுதிச்சுற்றில் மோதிய யாஷிகாவும் ஜனனியும் போட்டியின் முடிவில் சமஅளவில் குடுவையில் நீரை வைத்திருந்ததால் போட்டி மீண்டும் தொடர்ந்தது. அப்போது குடுவையை ஒரு கையில் மட்டும் ஏந்திக்கொள்ளவேண்டும் என்று கட்டளையிடப்பட்டது. உடற்சோர்வு, மனச்சோர்வு எனக் கடினமான நிலையில் போட்டியிட்டார்கள் இருவரும். ஒருகட்டத்தில் குடுவையில் இருந்த பெரும்பாலான நீரைக் கீழே சிந்திவிட்டார் ஜனனி. எனினும் அதுவே அவருக்கு வசதியாக இருந்தது. குறைவான நீரைக் கொண்ட குடுவையை அவர் கையில் ஏந்தியபடி எளிதாக நகர்ந்தார். குடுவையில் முக்கால்வாசி நீரை வைத்திருந்த யாஷிகாவால் ஒருகட்டத்தில் அதைக் கையில் பிடிக்கமுடியாமல் போனது. குடுவையைக் கீழே விட்டுவிட்டார். இதனால் கடினமான இப்போட்டியில் வென்று இறுதிவாரத்துக்குத் தகுதி பெற்றார் ஜனனி.

இவர்தான் முதல் ஆளாக வெளியேறுவார் என நினைத்தோம். ஆனால் எதிர்பாராத விதத்தில் ஜனனி ஜெயித்துள்ளார். இதுபோன்ற போட்டிகளில் மன வலிமை முக்கியம். அது அவரிடம் உள்ளது என கடந்த வருடப் போட்டியாளர்கள் ஜனனியின் வெற்றி குறித்து தங்கள் கருத்துகளைப் பகிர்ந்துகொண்டார்கள்.

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.