சமுதாயம், அரசியல், சினிமா மீது அவருக்கு நிறைய அதிருப்தி, கோபம் இருந்தன: மகேந்திரனுக்கு இறுதி அஞ்சலி செலுத்திய ரஜினி!

முள்ளும் மலரும் படம் பார்த்துவிட்டு உன்னைத் தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்தியதற்குப் பெருமைப்படுகிறேன் என்றார் கே.பாலசந்தர்...
சமுதாயம், அரசியல், சினிமா மீது அவருக்கு நிறைய அதிருப்தி, கோபம் இருந்தன: மகேந்திரனுக்கு இறுதி அஞ்சலி செலுத்திய ரஜினி!

பிரபல இயக்குநர் மகேந்திரன் உடல்நலக்குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது, 79.

முள்ளும் மலரும், உதிரி பூக்கள், ஜானி, நெஞ்சத்தைக் கிள்ளாதே போன்ற முக்கியமான தமிழ்ப் படங்களை இயக்கியுள்ளார். 2006-ல் வெளியான சாசனம் அவர் இயக்கிய கடைசிப் படம். தெறி, சீதக்காதி போன்ற படங்களில் நடித்துள்ளார். 

பொதுமக்கள் அஞ்சலிக்காக மகேந்திரனின் உடல் காலை 10 மணி முதல் அவருடைய சென்னை - கொளத்தூரில் உள்ள நாராயணபுரம் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. இறுதிச்சடங்கு மாலை 5 மணியளவில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை பள்ளிக்கரணையில் இயக்குநர் மகேந்திரன் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பின்பு செய்தியாளர்களிடம் ரஜினி பேசியதாவது:

எனக்குள் இன்னொரு ரஜினிகாந்த் இருப்பதை  எனக்கே காண்பித்தவர் இயக்குநர் மகேந்திரன். நடிப்பில் புதிய பரிமாணத்தை எனக்குக் கற்றுக்கொடுத்தவர். முள்ளும் மலரும் படம் பார்த்துவிட்டு உன்னைத் தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்தியதற்குப் பெருமைப்படுகிறேன் என்றார் கே.பாலசந்தர் சார். பேட்ட படத்தில் அவர் நடித்தபோது நீண்டநாள் கழித்து நிறைய பேசினோம். இந்தச் சமுதாயம், அரசியல், சினிமா மீது அவருக்கு நிறைய அதிருப்தி, கோபம் இருந்தது. அவர் எப்பேர்ப்பட்ட மனிதர் என்றால் சினிமாவிலும் சரி, வாழ்க்கையிலும் சரி, அடுத்தவருக்காகத் தன்னுடைய சுயமரியாதை, சுயகெளரவத்தை விட்டுக்கொடுத்து வாழ்ந்தவர் கிடையாது. அவருடன் சினிமாவைத் தாண்டிய நட்பு இருந்தது. மிகவும் ஆழமான நட்பு. தமிழ் சினிமா இருக்கும்வரை மகேந்திரனுக்கு ஓர் இடம் இருக்கும். அவருடைய இழப்பு தமிழ் சினிமாவுக்குப் பேரிழப்பு என்று கூறினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com