பிரபல கிரிக்கெட் வீராங்கனை மிதாலி ராஜின் வாழ்க்கை, திரைப்படமாக உருவாகவுள்ளது.
தமிழ்க் குடும்பத்தைச் சேர்ந்த துரைராஜ் - லீலாராஜ் ஆகியோருக்குப் பிறந்த மிதாலி ராஜ் ஆரம்ப காலங்களில் ராஜஸ்தானின் ஜோத்பூரில் வசித்தார். பிறகு மிதாலியின் குடும்பம் பிறகு ஹைதராபாத்துக்கு இடம்மாறியது. முதலில் பரதநாட்டியம் கற்றுவந்த மிதாலி பிறகு தந்தையின் உந்துதலால் கிரிக்கெட்டிலும் ஆர்வம் செலுத்தி பிறகு இந்திய அணியில் இடம்பிடித்தார். வீரராகவும் கேப்டனாகவும் இந்திய மகளிர் கிரிக்கெட்டில் பல சாதனைகளை நிகழ்த்தியுள்ளார் மிதாலி ராஜ்.
1999-ம் ஆண்டு தனது முதல் ஒருநாள் கிரிக்கெட்டை விளையாடிய மிதாலி ராஜ் மகளிர் ஒருநாள் கிரிக்கெட்டில் 200 ஒருநாள் ஆட்டங்களை விளையாடிய முதல் வீராங்கனை என்கிற சாதனையைச் சமீபத்தில் நிகழ்த்தினார். 2017-ல் மகளிர் ஒரு நாள் கிரிக்கெட்டில் 6,000 ரன்கள் குவித்த முதல் வீராங்கனை என்ற உலக சாதனையைப் படைத்தார். இதுவரை 10 டெஸ்டுகளிலும் 203 ஒருநாள் ஆட்டங்களிலும் விளையாடியுள்ளார்.
இந்நிலையில் மிதாலி ராஜின் அற்புதமான கிரிக்கெட் வாழ்க்கை திரைப்படமாக உருவாகவுள்ளது. மிதாலி ராஜ் வேடத்தில் தாப்சி நடிக்கவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த வருடம் தொடங்கவுள்ளது.