தீர்ந்தது மனவருத்தம்: ஒரே மேடையில் இளையராஜா - எஸ்பிபி!

ஒரே மேடையில் இளையராஜாவும் எஸ்பிபியும் மீண்டும் தோன்றுவது இசை ரசிகர்களை மிகவும் மகிழ்ச்சியடைய வைத்துள்ளது...
தீர்ந்தது மனவருத்தம்: ஒரே மேடையில் இளையராஜா - எஸ்பிபி!
Published on
Updated on
1 min read

இளையராஜாவின் இசை நிகழ்ச்சியில் பங்கேற்று பாடவுள்ளார் எஸ்.பி. பாலசுப்பிரமணியம். இதையடுத்து இருவருக்கும் இடையே கடந்த சில வருடங்களாக நிலவிய மனவருத்தம் தீர்ந்துள்ளதாக அறியப்படுகிறது. 

2017-ம் வருடம் மார்ச் மாதம் இளையராஜா - எஸ்.பி. பாலசுப்பிரமணியம் இடையே காப்புரிமைப் பிரச்னை தொடர்பாக மோதல் ஏற்பட்டது. திரையிசைப் பயணத்தில் 50 ஆண்டுகளைப் பூர்த்தி செய்துள்ளதையொட்டி எஸ்.பி. பாலசுப்பிரமணியம் உலகம் முழுவதும் பயணித்து இசைக் கச்சேரிகளை நடத்தினார். ஆனால், இளையராஜாவின் சார்பில் அவரது வழக்கறிஞர் எஸ்பிபிக்கும், பாடகர் சரண், பாடகி சித்ரா, கச்சேரியை நடத்தும் ஒருங்கிணைப்பாளர்களுக்கும் நோட்டீஸ் ஒன்றை அனுப்பினார். இளையராஜா இசையமைத்த பாடல்களை அவரின் அனுமதி இல்லாமல் மேடையில் பாடவோ, இசைக்கச்சேரி நடத்தவோ கூடாது. அதையும் மீறிச் செய்தால் காப்புரிமைச் சட்டத்துக்கு எதிராகிவிடும். எனவே மிகப்பெரிய அபராதத் தொகையை சட்டப்படி தரவேண்டியிருக்கும் என்று அந்த நோட்டீஸில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதையடுத்து, இனிமேல் இளையராஜாவின் பாடல்களை மேடையில் பாட மாட்டேன். கடவுளின் ஆசீர்வாதத்தில் இளையராஜா தவிர, பல இசையமைப்பாளர்களின் இசையில் நான் பாடல்கள் பாடியிருக்கிறேன். அந்தப் பாடல்களை இனிவரும் கச்சேரிகளில் பாடுவேன். உங்கள் அனைவரிடமும் நான் கேட்கும் ஒரே கோரிக்கை, இந்த விஷயம் பற்றி எந்தவிதமான விவாதமோ, கருத்தோ சொல்ல வேண்டாம் என அறிக்கை வெளியிட்டார் எஸ்.பி.பி.

பிறகு கடந்த வருடம் செப்டம்பர் மாதம், தன் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்தாலும் பரவாயில்லை, இளையராஜா இசையமைத்த பாடல்களை இனி மேடையில் பாடவுள்ளேன். ஒரு நண்பனுக்கு அவர் வக்கீல் நோட்டீஸ் அனுப்புவது சரியல்ல. எந்தப் பாடலுக்கு அவருக்கு உரிமை உள்ளது என்பதை அவர் கூறவேண்டும். அப்போதுதான் இந்தப் பிரச்னைக்கு ஒரு தெளிவு கிடைக்கும். இதெல்லாம் நடந்தாலும் அவர்மீது எனக்கு துளி மரியாதை குறையவில்லை. ஓர் இசையமைப்பாளராக எப்போதும் அவர் காலைத் தொட்டுக் கும்பிடுவதற்குத் தயங்கமாட்டேன் என்று எஸ்.பி. பாலசுப்பிரமணியம் ஹைதராபாத்தில் பேட்டியளித்தார். 

இந்நிலையில் வரும் ஜூன் 2 அன்று தன்னுடைய பிறந்தநாளையொட்டி, இசை நிகழ்ச்சி ஒன்றை சென்னையில் நடத்தவுள்ளார் இசையமைப்பாளர் இளையராஜா. இந்த இசை நிகழ்ச்சியில் எஸ்.பி. பாலசுப்பிரமணியம், கே.ஜே. யேசுதாஸ், பாம்பே ஜெயஸ்ரீ, சுதா ரகுநாதன், உஷா உதூப், மனோ ஆகிய பாடகர்கள் பாடவுள்ளார்கள். சென்னை - செம்பரம்பாக்கம் பகுதியில் உள்ள ஈவிபி ஃபிலிம் சிட்டியில் இந்த இசை நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

ஒரே மேடையில் இளையராஜாவும் எஸ்பிபியும் மீண்டும் தோன்றுவது இசை ரசிகர்களை மிகவும் மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com