பிரபல தெலுங்கு நடிகர் ஜூனியர் என்டிஆரின் ரசிகர்கள் மீது நடிகை நிலா காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.
2005-ல் அன்பே ஆருயிரே என்கிற தமிழ்ப் படத்தின் மூலமாகத் திரையுலகுக்கு அறிமுகமானார், நிலா. மீரா சோப்ரா என்கிற பெயரைத் தமிழுக்காக நிலா என மாற்றினார் எஸ்.ஜே. சூர்யா. பிரபல பாலிவுட் நடிகைகள் பிரியங்கா சோப்ரா, பரினீதி சோப்ரா ஆகியோரின் உறவினர் இவர். கிட்டத்தட்ட பத்து வருடங்கள் தமிழ், தெலுங்குப் படங்களில் மட்டும் நடித்து வந்த நிலா, 2014 முதல் மும்பையில் வசித்து, தீவிரமாக ஹிந்திப் படங்களில் நடிக்க முயன்று வருகிறார். எனினும் கடந்த 5 வருடங்களில் இரண்டு ஹிந்திப் படங்களில் மட்டுமே அவர் நடித்துள்ளார். கடந்த வருடம் நிலா நடிப்பில் செக்சன் 375 என்கிற ஹிந்திப் படம் வெளியானது. தற்போது இரு ஹிந்திப் படங்களில் நடித்துள்ளார். தற்போது மீரா சோப்ரா என்கிற பெயரிலேயே அறியப்படுகிறார்.
சமூகவலைத்தளங்களில் சமீபத்தில் உரையாடினார் நிலா. அப்போது ஜூனியர் என்டிஆர் பற்றிய ஒரு கேள்விக்கு தனக்கு அவரைப் பற்றி தெரியாது, தான் அவருடைய ரசிகரல்ல எனப் பதில் அளித்தார் நிலா. மேலும் தனக்குப் பிடித்த தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு என்றும் பதில் அளித்திருந்தார். இதனால் ஆத்திரமடைந்த ஜூனியர் என்டிஆர் ரசிகர்கள், நிலாவுக்கு எதிராகக் கருத்துகளைச் சமூகவலைத்தளங்களில் பதிவு செய்தார்கள். தன்னை ஆபாசமாகத் திட்டியதால், ஜூனியர் என்டிஆர் ரசிகர்கள் மீது சைபர் கிரைமிலும் ஹைதராபாத் காவல்துறையிலும் புகார் அளித்தார் நிலா. இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.