எஸ்.பி.பி. மருத்துவக் கட்டணப் பிரச்னையை வெங்கய்ய நாயுடு தீர்த்து வைத்தாரா?: சரண் பதில்

மருத்துவக் கட்டணம் குறித்த விவரங்களை நான் நிச்சயம் வெளியிடுவேன்...
எஸ்.பி.பி. மருத்துவக் கட்டணப் பிரச்னையை வெங்கய்ய நாயுடு தீர்த்து வைத்தாரா?: சரண் பதில்

எஸ்.பி,பி. மருத்துவச் சிகிச்சை கட்டணம் தொடர்பாக தமிழக அரசின் உதவியை அவருடைய மகன் சரண் நாடியதாகவும் கடைசியில் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு தலையிட்டு இந்த விவகாரத்தைத் தீர்த்து வைத்ததாகவும் வெளியான செய்திகளுக்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, சென்னை தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட எஸ்.பி.பாலசுப்ரமணியம் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். அவரது உடல் தாமரைப்பாக்கம்-செங்குன்றம் சாலையில் உள்ள பண்ணை வீட்டில் காவல் துறை மரியாதையுடன் சனிக்கிழமை அடக்கம் செய்யப்பட்டது. அவரது உடலுக்கு திரைத் துறையினா், அரசியல் பிரமுகா்கள் அஞ்சலி செலுத்தினா்.

இந்நிலையில் எஸ்.பி,பி. மருத்துவச் சிகிச்சை கட்டணம் தொடர்பாக வெளியாகியுள்ள செய்திகளை சரண் மறுத்துள்ளார். இதுதொடர்பாக வெளியிட்டுள்ள விடியோவில் அவர் கூறியதாவது:

மருத்துவச் சிகிச்சை கட்டணம் தொடர்பாக வதந்தி ஒன்று பரப்பப்படுகிறது. மருத்துவமனை அறிவித்த கட்டணத்துக்குப் பதிலாக நாங்கள் குறைவாகப் பணம் கட்டியதாகவும் மீதமுள்ள தொகை இருப்பதாகவும் இதையடுத்து சிகிச்சைக் கட்டணம் தொடர்பாகத் தமிழக அரசிடம் நாங்கள் உதவி கேட்டதாகவும் இதற்கு அவர்கள் பதிலளிக்க மறுத்ததால் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு தலையிட்டு இந்த விவகாரத்தைத் தீர்த்து வைத்ததாகவும் செய்தி வெளியாகியுள்ளது. நாங்கள் பணம் கட்ட மறுத்ததால் எனது தந்தையின் உடலை வழங்க மருத்துவமனை மறுத்ததாகவும் செய்தி பரப்பப்படுகிறது. இவை அனைத்தும் அபத்தமானது.

இந்தச் செய்தியுடன் தொடர்புடையவர்கள் இதைப் பார்த்து எந்தளவுக்கு வேதனையடைவார்கள் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். நம்மைச் சுற்றி இப்படிப்பட்ட மனிதர்கள் இருக்கிறார்கள் என்பது வேதனையானது. இவர்கள் எஸ்.பி.பி. ரசிகர்களாக இருக்க முடியாது. ஏனெனில் அவர் இதுபோன்ற ஒரு காரியத்தைச் செய்யமாட்டார். இந்தச் செய்தியைப் பரப்பியவரை நான் மன்னித்து விடுகிறேன். சம்பந்தப்பட்ட நபர் வாழ்க்கையில் உருப்படியான காரியங்கள் செய்யவேண்டும்.

தந்தையை அக்க்கறையுடன் கவனித்துக்கொண்ட எம்ஜிஎம் மருத்துவமனைக்கு எங்கள் குடும்பம் நன்றி தெரிவித்துக்கொள்கிறது. மருத்துவமனைக்குச் சென்று மருத்துவர்கள், செவிலியர்களைச் சந்திப்பதை நான் மிஸ் செய்கிறேன். அப்போலோ மருத்துவமனையிடம் ஒரு மருத்துவ உபகரணத்தை எம்ஜிஎம் கேட்டபோது அவர்கள் உடனடியாக வழங்கினார்கள். அனைவரும் அற்புதமான மனிதர்கள். வதந்தியைப் பரப்பியவரும் சிறந்த மனிதராகலாம். நற்பண்புகளை அவர் கற்றுக்கொள்ளவேண்டும். 

மருத்துவக் கட்டணம் குறித்த விவரங்களை நான் நிச்சயம் வெளியிடுவேன். இதுபற்றி நானும் மருத்துவமனை நிர்வாகமும் செய்தியாளர் சந்திப்பு ஒன்றை நடத்தப் போகிறோம். இதைச் செய்யவேண்டிய நிலைமைக்கு  நாங்கள் தள்ளப்பட்டது வேதனையானது. சர்வசாதாரணமாக ஒரு வதந்தியை இணையத்தில் பரப்பி மக்களைக் குழப்பிவிடுகிறார்கள் என்று கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com