சரத்குமார்-ராதிகாவுக்கு ஓராண்டு சிறை

காசோலை மோசடி வழக்கில் நடிகர் சரத்குமார் மற்றும் நடிகை ராதிகாவுக்கு தலா ஓராண்டு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ராதிகா - சரத்குமார் (கோப்புப்படம்)
ராதிகா - சரத்குமார் (கோப்புப்படம்)

காசோலை மோசடி வழக்கில் நடிகர் சரத்குமார் மற்றும் நடிகை ராதிகாவுக்கு தலா ஓராண்டு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னையில் எம்.பி., எம்.எல்.ஏக்கள் தொடர்பான வழக்கை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

நடிகர் சரத்குமார், நடிகை ராதிகா சரத்குமார், தயாரிப்பாளர் லிஸ்டின் ஸ்டீபன் ஆகியோர் பங்குதாரர்களாக உள்ள மேஜிக் ப்ரேம்ஸ் நிறுவனத்தின் சார்பில் ரேடியன்ஸ் என்ற பட தயாரிப்பு நிறுவனத்திடம் கடந்த 2014-ம் ஆண்டு 2 கோடி ரூபாய் கடனாக பெற்றிருந்தனர்.

 ரேடியன்ஸ் நிறுவனம் சார்பில் பணத்தை திருப்பி தருமாறு கோரிய நிலையில்,
மேஜிக் பிரேம்ஸ் நிறுவனம் சார்பில் 75 லட்ச ரூபாய்க்கான 2 காசோலையும்,
சரத்குமார் சார்பில் தனிப்பட்ட முறையில் 10 லட்சம் மதிப்புள்ள 5 காசோலையும் வழங்கப்பட்டது.
 

ஏழு காசோலைகளும் வங்கியில் பணம் இல்லாமல் திரும்பி விடவே
ரேடியன்ஸ் நிறுவனம் சார்பில் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில 7 காசோலை மோசடி வழக்குகள் தொடரப்பட்டது.

இரு வழக்கில்  சரத்குமார், ராதிகா சரத்குமார், தயாரிப்பாளர் லிஸ்டின் ஸ்டீபன் ஆகிய மூவரும்,மற்ற 5 வழக்கில் சரத்குமாரும் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டிருந்தனர்

 சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நடைப்பெற்று வந்த இந்த வழக்குகள், முன்னாள் இந்நாள் எம்எல்ஏக்கள், எம்.பி.க்கள் மீதான வழக்கை விசாரிப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு தொடர்ந்து விசாரணை  நடைபெற்று வந்தது.

இந்த வழக்கில் இன்று தீர்ப்பு என அறிவிக்கப்பட்ட நிலையில் நடிகர் சரத்குமார் மற்றும் தயாரிப்பாளர் லிஸ்டின் ஸ்டீபன் ஆகிய இருவரும் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி இருந்தனர்.

நடிகை ராதிகா சரத்குமார் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதால், அவர் தன்னை வீட்டில் தனிமை படுத்திக் கொண்டுள்ளதாக  தெரிவிக்கப்பட்டது.

சரத்குமார் மீது 7 வழக்குகளும், ராதிகா மீது இரண்டு வழக்குகளும் தொடரப்பட்டது. இது தொடர்பான விசாரணை மேற்கொண்ட எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றம், இருவருக்கும் தலா ஓராண்டு சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது. மேலும் மேஜிக் ப்ரேம் நிறுவன பங்குதாரர் லிஸ்டன் ஸ்டீபனுக்கும் நீதிமன்றம் ஒரு வருடமும் சிறை தண்டனை விதித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com